தமிழீழ விடுதலைப் புலிகளே இந்திய கடற்பகுதியின் அரணாக இருந்தனர் – கருணாஸ்.!

breaking
தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சீனாவின் அச்சுறுத்தலில் இருந்து  இந்திய கடற்பிரதேசங்கள் பாதுகாக்கப்பட்டதாக நடிகரும்  அ.தி.மு.க.வின் சட்டமன்ற உறுப்பினருமாக கருணாஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈழத்தில் அரங்கேறிய படுகொலை எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இலங்கை அரசாங்கத்தினால் மூடிமறைக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழ் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் மேலும் கூறியுள்ளதாவது, “தமிழீழ விடுதலைப்புலிகள் இந்திய கடற்பகுதியின் பாதுகாப்பு அரணாக இருந்தனர். தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகள் இலங்கை கடற்பரப்பை ஆக்கிரமித்துவிட்டன. அத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக இருப்போமென கூறியிருந்தார். ஆனால் அதனை எவரும் கவனத்திற்கொள்ளவில்லை.  தற்போது இலங்கையிடம் இந்திய அரசு கெஞ்சும் நிலைமை உருவாகியுள்ளது. ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்துவிட்டால் சிங்கள சமுதாயம் தனிமைப்பட்டுவிடும் என்ற காரணத்தினாலேயே அதனை இலங்கை அரசு தடுக்க முற்படுகின்றது. இந்தியா உள்ளிட்ட  பிற நாடுகளுடன் சுமுகமான உறவை இலங்கை பேணுவதற்கு இதுவும் காரணமாகும்” என கருணாஸ் தெரிவித்துள்ளார்.