ஶ்ரீலங்காவின் ஆக்கிரமிப்பு கடற்படை கோரும் காணிகளை அளவிடும் பணி நிறுத்த தீர்மானிப்பு

breaking
  வடதமிழீழம்: யாழ்.மாவட்டத்தில் ஶ்ரீலங்கா ஆக்கிரமிப்பு கடற்படை கோரும் பொதுமக்களின் காணிகள் தொடர்பாக ஆராய்ந்து உரிய பதில் வழங்கப்படும் வரையில் காணி அளவீடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற்றது. ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது. வடதமிழீழ யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஶ்ரீலங்கா ஆக்கிரமிப்புப் படைகள் தங்களுக்கு மக்களின் காணிகள் கேட்டவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மேற்படி விடயம் குறித்து இன்று யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராயப்பட்டது. இதன்போது கடற்படை மற்றும் காவல்துறையினர் உட்பட காணிகளுடன் சம்மந்தப்பட்ட சகல தரப்பினருடனும் ஆராய்ந்தே தீர்மானம் எடுக்கப்படவேண்டும். அதுவரையில் காணிகள் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்ககூடாது. குறிப்பாக சுவீகரிப்புக்கான அளவீடுகள் எதனையும் மேற்கொள்ளகூடாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.