குடி தண்ணீரில் கும்மாளமிடும் ஶ்ரீலங்கா ஆளுனர்: குடிக்க நீரின்றி தவிக்கும் மக்கள்

breaking
வடதமிழீழம்: கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி இயக்கச்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடிநீர் கிணற்றிலிருந்து வடக்கு மாகாண ஆளுநர் குளிப்பதற்கும் ஏனைய அலுவலக தேவைகளுக்கும் ஆயிரக்கணக்கான லீற்றர் நீர் எடுத்துச்செல்லப்படுகிறது என பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பளை இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள குடிநீர் கிணறு தற்போதும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. குறித்த கிணற்று நீர் பளை பிரதேசத்தில் அமைந்துள்ள சுத்தமான குடிநீரை கொண்ட ஒரேயொரு கிணறு எனவும் கிட்டத்தட்ட போத்தலில் அடைக்கப்பட்ட நீர் போன்று குறித்து கிணற்று நீர் காணப்படுகிறது எனவும் பொது மக்களால் தெரிவிக்கப்படுகிறது. வரட்சியான காலங்களில் பளை பிரதேசத்தில் பொது மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதற்கு குறித்த கிணறே பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் 2009 க்கு பின்னர் குறித்த கிணறு முழுமையான இராணுவக் கட்டுப்பாட்டில் காணப்படுகிறது. சிறியளவில் நீரை பெற்றுக்கொள்வதற்கு இராணுவத்தினர் இயக்கச்சி ஏ9 வீதியில் குழாய் வசதியை ஏற்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் பிரதேச சபையோ அல்லது பிரதேச செயலகமோ நீர்தாங்கி மூலம் நீரைப்பெற்று பொது மக்களுக்கு விநியோகிக்க முடியாதுள்ளது. ஆனால் குறித்த கிணற்றில் இருந்து யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு அவர் குளிப்பதற்கும் அலுவலக பணியாளர்களின் தேவைகளுக்கும் அதாவது குடிநீர் தவிர்ந்த ஏனைய தேவைகளுக்கு இந்த கிணற்றிலிருந்து நீர் எடுத்துச் செல்லப்படுகிறது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பளை பிரதேசத்தில் சில கிராமங்களில் குடிநீரை பெற்றுக்கொள்வதில் மக்கள்நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர் பொது மக்கள்தரப்பால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பொது மக்களின் இக் கருத்துதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் இளங்கோவனை தொடர்புகொண்டு வினவிய போது வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தின் பயன்பாட்டிற்கு இங்குள்ள நீர் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. எனவேதான் இயக்கச்சியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிணற்றில் இருந்து வாரம் ஒரு தடவை நீர்த்தாங்கி மூலம் நீரை பெற்று வருகின்றோம். இந்த நீர் ஆளுநர் அலுவலகம் மற்றும் இங்குள்ள பணியாளர்களின் தேவைகள் அலுவலகத்திற்கு வருகின்ற பொது மக்களின் தேவைகளுக்கு பயன்படுகிறது என்றார்.   தமிழீழ பிரதேசங்களில் வளமான பகுதிகளை இராணுவ முகாம் எனும் போர்வையில் ஶ்ரீலங்கா ஆக்கிரமிப்புப் படைகள் கையகப்படுத்தி வைத்திருக்க மக்கள் வீதி வீதியாக அலைகிறார்கள்.   ஏழை மக்களின் துயர் தெரிந்தவன் நான் என  பொய் வார்த்தைகளை தினமும் அவிழ்த்து விட்டுக்கொண்டு மக்களின் குடிநீரை தான் குளிப்பதற்கு பயன்படுத்துவது என்ன விதத்தில் ஞாயம்