நான் நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல. ஆரம்பகால இயக்க போராட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன் விக்னேஸ்வரனை விமர்சித்து தான் நான் அரசியல் செய்யவேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை.
அதற்காக உண்மைகளை மூடி மறைப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு திராணி இருந்தால் அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு ஊடகங்களுக்கு முன்பாக ஆதாரத்துடன் பதில் கூறத் தயாரா? என ஒட்டுக்குழு உறுப்பினரும் வடக்கு மாகாண முன்னாள் எதிர்க் கட்சித்தலைவருமான சி.தவராசா சவால் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவித்தாவது,
சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு விவகாரத்தில் வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நியமித்த விசாரணைக் குழுவில் அதிகாரிகள் பணத்தினை பெற்றுக்கொண்டு பிழையான அறிக்கையை தயாரித்து வெளியிட்டனரா? என சந்தேகம் எழுவதால் குறித்த விடயம் தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவினர் விசாரணை செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு மன்று அதன் பணிப்பாளருக்கு கட்டளையிட்டது.
அப்படியாயின் அந்த விசாரணைக் குழுவை நியமித்தது யார்? வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் காலாகாலமாக காப்பற்றி வரும் முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐந்கரநேசனே நியமித்தவர்.
இதே முன்னாள் விவசாய அமைச்சர் வடக்கு மாகாண சபையின் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் நோர்தேன் பவர் நிறுவனத்தை கடுமையாக சாடி கருத்துக்களை முன்வைத்திருந்தார். பின்னர் அதற்கு அடுத்த அமர்வில் தனது நிலைப்பாட்டினை மாற்றி தாமாகவே நிபுணர் குழு ஒன்றை நியமிக்கப் போவதாக அறிவித்தார்.
நிபுணர் குழுவை நியமிக்கும்போதே அதற்கு அதிகாரம் இல்லை. மாகாண அரசுக்கு அதிகாரம் இல்லை என கூறியிருந்தேன். எனினும் அதனை மீறி நியமித்து நிதிகள் செலவழிக்கப்பட்டு இடைக்கல அறிக்கையும் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் சுன்னாகம் நிலத்தடி நீரில் எண்ணெய் மாசுக்கள் எவையும் இல்லை கலக்கவில்லை என கூறப்பட்டது. நிபுணர் குழுவின் இறுதி அறிக்கையிலும் இதே பதிலே கூறப்பட்டது.
தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பில் பாதிக்கபட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தீர்ப்பிடப்பட்டுள்ளது. அப்படியாயின் நீர் மாசு ஏற்பட்டுள்ளது என்றே முடிவாகியுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணையில் மாகாண சபையோ, நிபுணர் குழு அறிக்கை பற்றியோ பேசப்படவில்லை என முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு அறிக்கையில் எழுதி அனுப்பியுள்ளார்.
ஓர் நீதியரசருக்கு வழக்கு விசாரணையில் வழக்காளி என்ன நிவாரணத்தை கோருகின்றாறோ அது தொடர்பில் மட்டுமே அங்கு பேசப்படும் என தெரியாதா? அல்லது நடிக்கிறாரா?இந்த வழக்கு அடிப்படை உரிமை சார்ந்தே தாக்கல் செய்யப்பட்டது. அதனை தவித்து ஏனைய விடயங்களில் நீதிமன்றம் தலையிடாது.
இந்நிலையில் என்னை அரசியல் இலாபத்துக்காக கருத்துக்களை வெளியிடுவதாக முன்னாள் முதல்வர் கூறியுள்ளார். நான் அவரை போல நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல.ஆரம்பகால இயக்க போராட்டத்தில் இருந்து அரசியலுக்கு வந்தவன் இவரை விமர்சித்து தான் நான் அரசியல் செய்யவேண்டும் என்ற தேவை எனக்கு இல்லை.
தற்காக உண்மைகளை மூடி மறைப்பதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது.முன்னாள் நீதியரசர் சி.வ வி.விக்னேஸ்வரனுக்கு திராணி இருந்தால் அறிக்கை விடுவதை நிறுத்தி விட்டு ஊடகங்களுக்கு முன்பாக ஆதாரத்துடன் பதில் கூற தயாரா?என சவால் விடுக்கின்றேன் என்றார்.