வடதமிழீழம்: யாழ்.கீரிமலை பகுதியில் கத்தி , கைக்கோடரி என்பவற்றுடன் நான்கு இளைஞர்கள் காங்கேசன்துறை காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கீரிமலை பகுதியில் நேற்று திங்கட்கிழமை சந்தேகத்திற்கு இடமான முறையில் சிலர் நடமாடுவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கூடி நின்ற நால்வரை சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது அவர்களிடம் , 3 கத்தி, கைக்கோடரி , சுத்தியல் , ஸ்கூருட் ரைவர் என்பவற்றுடன் 19ஆயிரத்து 500 ரூபாய் பணத்தினையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர். அதனை தொடர்ந்து நால்வரையும் கைது செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளின் பின்னர் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் முற்படுத்தினார்கள். வழக்கினை விசாரித்த நீதிவான் அவர்களை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு உத்தரவிட்டார்.