"GRAND PRIX VON BERN" சர்வதேச ஓட்டப் போட்டியில் தமிழின அழிப்பினை வெளிப்படுத்திய தமிழின உணர்வாளர்கள்!

breaking
  சுவிஸ் பேர்ண் மாநிலத்தில் சர்வதேச ரீதியிலாக 11.05.2019  சனிக்கிழமை அன்று நடைபெற்ற  "GRAND PRIX VON BERN"   ஓட்டப் போட்டியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு குறிப்பிட்ட  நேரத்திற்குள் பந்தய தூரத்தைக்  கடந்து  பதக்கங்களைப்  பெற்றுக் கொண்டதுடன்  சிறிலங்காவில்  சிங்களப் பேரினவாத அரசினால் தமிழ் மக்கள் மீது  தொடர்ச்சியாக  மேற்கொள்ளப்பட்டு  வரும் தமிழின அழிப்பினையும்  வெளிப்படுத்தினர். அகவணக்கத்துடன் மே18 – தமிழின அழிப்பு நாளை நினைவுகூர்ந்து  உறுதிமொழியுடன்  தமது பயிற்சிகளை ஆரம்பித்த தழிழின உணர்வாளர்களால்   “Run Against  The  Genocide“   என்ற  வாசகம்  பொறிக்கப்பட்ட  மேலாடைகளை அணிந்து  பங்குபற்றினர்.

ஒவ்வொரு வருடமும் மே மாதக் காலப்பகுதியில் நடாத்தப்படும் ஒரு இலட்சத்திற்கும்              மேற்பட்ட வேற்றினத்தவர்கள் பார்வையிடக் கூடியதுமான இம் மரதன் ஓட்டப்  போட்டியில்  எமது  தமிழின  அழிப்பினை  தொடர்ச்சியாக வெளிக்கொணரவேண்டிய  தேவை  உள்ளதனால்  சுவிசில்  இப்போட்டிகளில் பங்குபற்ற ஆர்வமுள்ளவர்கள் எம்மை அணுகுமாறும்   கேட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் 18.05.2019 சனிக்கிழமை தமிழின அழிப்புநாளில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும்  கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் சுவிஸ் வாழ் அனைத்து உறவுகளையும்  பேர்ண்  பாராளுமன்றம் அருகாமையில் அமைந்துள்ள Waisenhausplatz  திடலில் அணிதிரளுமாறு அன்புரிமையுடன் இத்தருணத்தில்  கேட்டுக்  கொள்கின்றோம்.

 

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு