இஸ்லாமிய மக்களின் கடைகள், வீடுகள், பள்ளிவாசல்கள் பல அடித்து நொறுக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டு கலவர பூமியாக மினுவாங்கொட நகர் காட்சியளிக்கின்றது.
குறித்த நகரில் மூவின மக்களதும் வியாபார ஸ்தாபனங்கள் இயங்கிவரும் நிலையில், முஸ்லிம்களின் வியாபார ஸ்தாபனங்கள் மட்டுமன்றி சிங்கள மக்களின் கடைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.
உடைந்த சுவர்களும் எரிந்த தூண்களும் புகைபடிந்த கட்டடங்களும் என நகர் தற்போது காட்சியளிக்கின்றது.
அங்குள்ள மக்களின் மனநிலை பற்றி நாம் கேட்டறிந்தோம். அடுத்து என்ன நடக்குமென்ற அச்சத்துடன் வாழ்வதாக தெரிவித்த மக்கள், சிலமுஸ்லிம்கள் செய்த தவறுக்கு ஏன் தம்மை பழிவாங்குகிறார்கள் என ஆதங்கமும் கவலையும் விரக்தியும் கலந்து கேட்டனர்.
நகரில் தற்போது பெருமளவான படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, இராணுவ வாகனங்கள் நகரில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதுவரை காலமும் எவ்வித பாகுபாடும் இன்றி வாழ்ந்த தாம் இனியும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதே இம்மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.