தமிழரசுக் கட்சி உள்ளே! மக்கள் வெளியே போராட்டம்

breaking

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று(1) மதியம் தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் இருந்து வந்த சிலர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாடு தொடர்பாக, கட்சியின் வாலிபர் முன்னணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது, இப்போராட்டம் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

போர் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் இன்றுவரை காணாமல் ஆக்கப்படடவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதை போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். மேலும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தவில்லை என குற்றம் சாட்டினர். இலங்கை அரசின் சுக போக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோடி ரூபாய் பணத்துக்கு விலை போய்விட்டனர். இவர்கள் மக்கள் நலனில் எவ்வித அக்கறையும் காடடவில்லை. எனவே இவர்கள் பதவிகளை துறக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த போராடடத்தில் ஈடுபட்டவர்கள் “காணாமல் போனோர் தொடர்பில் அரசாங்கத்துடன் கதைக்க ஏன் தயக்குகின்றீர்கள்?”, “உங்களால் தீர்வு பெற இயலாது என்றால் புதிய தலைமுறைக்கு வழிவிடுங்கள்”, “ஏன் போர்க்குற்றவாளிகளை பாதுகாத்து கால அவகாசம் கொடுத்தீர்கள்” போன்ற வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபடடனர்.