குழந்தையை வைத்து யாசகம் கேட்ட பெண்கள்: சந்தேகத்தின் பேரில் காவல்துறையால் கைது!

breaking
  வடதமிழீழம்: யாழ்ப்பாணம் வரணி சிட்டிவேரம் கண்ணகை அம்பாள் ஆலயத்தில் யாசகம் பெற்ற நால்வர் குழந்தையுடன் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல்துறை நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மலையகம் தலவாக்கலவிலிருந்து வந்த இரு பெண்களும், குழந்தையும், உதவியாக வந்த மானிப்பாயைச் சேர்ந்த பெண் உட்பட இருவரும் அடியார்களிடம் யாசகம் கேட்டவேளையில் சந்தேகம் கொண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். ஆலயத்தின் தேர்த்திருவிழா அன்று அலகு குத்திய நிலையில் இரு பெண்கள் தலையில் பாற்செம்பு வைத்தபடி மற்றப் பெண் கொண்டு வந்த பிள்ளையைக் காட்டி பிள்ளையின் நோய்க்காக நிதி சேகரிப்பதாகக் கூறி யாசகம் கேட்டுள்ளனர். இதனை அவதானித்த அடியார்கள் சந்தேகம் கொண்டு காவல்துறையினருக்குத் தகவல் அனுப்பவே அங்கு வந்த காவல்துறையினர் மூன்று பெண்கள் உட்பட நால்வரையும், குழந்தையையும் காவல்துறை நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.