"தமிழகத்திலும் பா.ஜ.க. கொடியை நாட்டுவோம் " மோடியின் சபதம் நிறைவேறுமா.?

breaking
தமிழகத்திலும் பா.ஜ.க. தனது கொடியை ஏற்றும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அத்துடன் மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகள் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆந்திராவுக்கு மோடி பயணத்தை மேற்கொண்ட நிலையில் அங்கு அவர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு ரேணிகுண்டா விமான நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் நரசிம்மன், உட்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி , முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர். அதனைதொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகையில், “திருப்பதி ஏழுமலையான் பாதத்தில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றியை அளித்த மக்களுக்கு நன்றி. மத்தியில் வலுவான ஆட்சி அமைவதற்கு நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். மாநிலங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் உதவ வேண்டும் என கடவுளைப் பிரார்த்திக்கிறேன். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசுக்கு எல்லா உதவியும் செய்து தரப்படும். பாரதீய ஜனதா கட்சி ஆந்திராவில் மட்டுமல்லாது தமிழகத்திலும் தனது கொடியை ஏற்றும்” என்று அவர் தெரிவித்தார்.