மாமனிதர் பேராசிரியர் துரைராஜா எமது மண்ணுக்கே திரும்ப வர வேண்டும்.!

breaking

“இங்கு வணக்க உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.”

வதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும்.

பேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து அன்புகாட்டிய முறைமைக்கு இந்த முதியவரின் வார்த்தைகள் நல்ல உதாரணம். இது தனியொருவரின் கருத்தல்ல; தமிழினத்தின் ஒட்டுமொத்தக் குரலும் – உணர்வும் இதுதான். இந்த உணர்வை பேராசிரியரின் பிரிவுபசார நிகழ்ச்சிகளின்போதும், பின்னர் அவரது மரணச்சடங்குகளின் போது மொதுமக்களும், மாணவர்களும், சக கல்விமான்களும் அவருக்குச் செலுத்திய இறுதி மரியாதையிலும் கண்டுகொள்ள முடியும். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் சூடுவதுபோல, தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டையும் கெளரவ விருதையும் பேராசிரியர் பெற்றுக்கொண்டார். பிரிவுபசாரத்தின்போது பேராசிரியரின் பணியைப் பாராட்டி ஒரு செய்தியையும், பேராசிரியர் மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செய்த ஒரு இரங்கல் செய்தியையும் வெளியிட்டு, பேராசிரியருக்கு ஒரு அதி உச்சக் கௌரவத்தைத் தலைவர் கொடுத்திருந்தார்.

ஈழத்தமிழினம் கல்விப் பாரம்பரியம் மிக்க ஒரு மக்கள் இனம் என்பதைப் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்வர். உலகம் போற்றும் கல்விமான்கள் பலரை தமிழீழ அன்னை பெற்றேடுத்துள்ளாள் என்பதும் மறுக்கப்படமுடியாத உண்மை. ஆனால் இவர்களுள் எத்தனைபேர் பிறந்த மண்ணுக்குச் சேவை செய்தார்கள்? எத்தனைபேர் தனது இனத்தின் ஒட்டுமொத்த வாழ்வை உயர்த்திவிட தன்னலம் பாராது பாடுபட்டார்கள்? அறிவின் உச்சத்தில் பணிவைக் கடைப்பிடித்து மக்கள் சேவகனாக, மக்களில் ஒருவனாக வாழ்ந்த மண்பற்றுள்ள பேராசான்கள் எத்தனைபேர்?

இந்த வினாக்களுக்கு விடையாக “பேராசியர் துரைராசா!” என்று எல்லோரும் ஒருமித்துக் கூறுவார். அந்தளவுக்கு பேராசிரியரின் அறிவும், பண்பும், பணிவும், தனிப்பட்ட வாழ்வும், மேன்மையுடையதாக அமைந்திருந்தன.

தமிழ் மக்களின் சொத்துக்களின் ஒன்றாகிய கல்விக்குப் பேராபத்து நேர்ந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ஏற்றுக்கொண்ட அவர், தமிழரின் உயர் கல்விக்கு புத்துயிர் ஊட்டி, புது இரத்தம் பாய்ச்சியிருந்தார் என்பது வரலாற்று உண்மை.

அவர் வகித்த பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியங்களும் சிங்கள அரசின் கைகளில் இருந்தபோதும், தமிழீழ தேசத்திற்கு, தமிழ் மக்களுக்கு சேவை புரிவதற்கு அவற்றை ஒரு தடையாகச் சொல்லி இவர் தப்பிக்க முயன்றதில்லை. அவர் கலந்துகொண்ட எல்லாக் கூட்டங்களிலும், எல்லாக் கலந்துரையாடல்களிலும், எல்லா நிகழ்வுகளிலும், தமிழினத்துக்கு எதிரான ஒடுக்குமுறைபற்றியும் தமிழீழ தேசியம் பலம்பெறவேண்டிய அவசியம் பற்றியும், தெளிவாகவும் வெளிப்படையாகவும் தனது கருத்தை எடுத்துக்கூறுவார்.

நூல் வெளியீட்டு விழாவிலும் தமிழீழ தேசியம்பற்றிப் பேசுவார்.

கல்வி மற்றும் அபிவிருத்தி சம்மந்தப்பட்ட கூட்டங்களிலும் தமிழீழ தேசியம்பற்றிப் பேசுவார்.

பேராசானுக்கு விருது சூட்டி மகிழும் பெருந்தலைவன்

“தேசப்பற்றோடும், மக்கள் நேயத்தோடும் மண்ணுக்கு அவர் மகத்தான சேவை ஆற்றினார்.”

சக கல்விமான்கள் மற்றும் வேற்று இன நண்பர்களுடன் கலந்துரையாடும்போதும் தமிழீழ தேசியத்தை வலியுறுத்திப் பேசுவார்.

ஏன்! அவருக்கு நடந்த பிரிவுபசாரக் கூட்டத்திலும் அதையேதான் பேசினார்.

தமிழீழத்தில் நடந்த கூட்டங்களில் மட்டுமல்ல, சிங்கள தேசத்தில், கல்விமான்கள் மத்தியில் நடைபெற்ற கலந்துரையாடல்களிலும் அதையேதான் பேசினார்; வெளிநாடுகளில் நடந்த சந்திப்புக்களிலும் அதையேதான் வற்புறுத்தினார்.

தமிழரின் சுயநிர்ணய உரிமைபற்றியும், தமிழீழ தேசியத்தைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் பேசுவதற்கு ஒர்போழுதும் அவர் அஞ்சியதுமில்லை; பின் வாங்கியதுமில்லை.

அதேவேளை. உலகளாவியரீதியில் தத்தமது வாழ்க்கைச் சக்கரங்களைச் சுழற்றுவதற்குத் திண்டாடும் ஏழை மக்களையும் அவர் அடிக்கடி நினைவூட்டிப் பேசி, அந்த மக்களின்பால் தான் வைத்திருக்கும் கரிசனையையும் எடுத்துரைப்பார். 500 கோடி உலக சனத்தொகையில் 1/5 பகுதியினர் பட்டினிக்கு முகங்கொடுத்து வாழப்போராடுகின்றனர் என்று எடுத்துக்கூறி, அந்தத் துர்ப்பாக்கியநிலை எமது மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அறிவுரை கூறுவார்.

“அரசு திட்டமிட்டு தமிழரின் கல்வியை அழிக்க முநிகின்றது. ஆனால் தமிழினத்தின் கல்வியை அழியவிடாது பாதுகாப்பது எங்களின் கடமை” என்று, வதிரியில் நடந்த பிரிவுபசார விழாவில் பேசிய பேராசிரியர் அவர்கள்…………….

“எமது இயற்கை வளத்தையும் கல்வியால் பெறப்படும் மூளைவளத்தையும் கொண்டு எமது மனத வளத்தையும் சரியாக வளர்த்தெடுத்து, பயன்படுத்தி, எமது தேசத்தின் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்” என்று தேசியப் பிரக்ஞையுடன் பேசினார். அத்துடன் நின்று விட்டாரா…………..? இல்லை.

“கிராமங்கள் வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் வளரும்” என்றார்.

“ஏழை எளிய மக்களின் வாழ்வு உயர்ந்தால்தான் கிராமம் வளரும்” என்றார்.

“இந்த ஏழை எளிய மக்களின் வாழ்வை வளப்படுத்த சனசமூக நிலையங்கள் பாடுபடவேண்டும்” என்றும் அறிவுரை கூறினார்.

தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் நியாயம்பற்றி சிங்கள தேசத்தில், சிங்களப் புத்திஜீவிகள் மத்தியில் விவாதிக்கும்போது, எதிராளிகளின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டோ அல்லது தன்னலத்தை அடிப்படையாகக்கொண்ட காரணங்களுக்காகவோ விட்டுக் கொடுத்தோ அல்லது ‘சளாப்பிக்’ கதைத்தோ இல்லை. இந்த நேர்மையை தெளிவான அவரது அரசியல் நிலைப்பாட்டை, பேரினவாத உணர்வுடன் உள்ள சிங்கள இனத்தின் புத்திஜீவிகள் கூட மதித்தனர்.

பிரிவுபசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது பேராசிரியர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

ஒருநாள் கத்தோலிக்கச் சிங்களவரான ஒரு கல்விமான் பேராசிரியரிடம் சொன்னாராம்.

“சிங்களவர் மத்தியில் கத்தோலிக்கரான நாங்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கின்றோம். அதனால் பௌத்த சிங்களவர்களுக்கு விட்டுக்கொடுத்து, சகிப்புத் ஹன்மையுடன் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக, அமைதியாக வாழக் கற்றுக்கொண்டுள்ளோம். அதுபோல நீங்களும் (தமிழினம்) விட்டுக்கொடுத்து அமைதியாக வாழலாம்தானே” என்று.

இதற்குப் பதில்கூரும்போது, சிங்களப் பேரினவாத அரசுகளின் தமிழின விரோத நடவடிக்கைகளை பேராசிரியர் விளக்கிவிட்டு,

“…………தமிழர் ஒரு தேசிய இனம் (Nation); அவர்களுக்கு என்றொரு தனித்துவமான நிலமுண்டு, அதேபோல மொழி உண்டு, பண்பாடுண்டு, பொருளாதார வாழ்வுண்டு, ஆகவே அவர்கள் தம்மைத் தாமே ஆட்சிசெய்யக்கூடிய சுயநிர்ணய உரிமையையும் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் தம்மைத்தாமே ஆட்சிசெய்ய விரும்புகின்றார்கள்” என்று பதிலளித்தாராம்.

இந்த விடயங்களை ஒரு கூட்டத்தில் வைத்து பேராசிரியர் அவர்களே தெரிவித்தார்.

தமிழீழத் தேசிய உணர்வுடன் பேசியது மட்டும்தானா பேராசிரியர் செய்த பணி? இல்லை; பேசியபடி வாழ்ந்தும் காட்டியதுதான் அந்தப் பேராசானின் பெருமைக்குக் காரணம்!

“சலுகை ஏறக்கூடிய உரிமை இருந்தும் ஏன் நீங்கள் கப்பல் பயணத்தைத் தவிர்த்து, கொலைக்கடலான கிளாலியூடாக கொழும்புக்குப் பயணம் செய்கிண்றீர்கள்?” என்று அன்ரன் பாலசிங்கம் அவர்கள் கேட்டபோது, அந்தப் பெருமகன் பெருமைபொங்கக் கூறிய பதில், தமிழீழப் போராற்ற வரலாற்றில் பொறிக்கப்பட்டுவிட்டது.

“எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன், கிளாலி ஊடாக பயணம் செய்யக்கூடாது என அரசு சட்டம் போட்டது. ஆனால் மக்கள் அதை மீறிப் பயணம்போய் அரசின் சட்டத்தை உடைத்தனர். இதுவும் அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம் ஆகும். நானும் மக்களுடன் சேர்ந்து எனது பங்களிப்பையும் செய்கின்றேன். இதன்மூலம் மக்கள்படும் வேதனையில் நானும் பங்குகொண்டு மனநினைவடைகின்றேன்” என்று மனமகிழ்ச்சியுடன் பேராசிரியர் கூறியிருந்தார்.

இன்னுமொரு தடவை, கொழும்பிலிருந்து கப்பல்மூலம் தீவகத்தை அடைந்த பேராசிரியர், ஒருநாள் இரவை அகதிமுகாமில் எமது மக்களுடன் கழித்தார். அவருக்குத் தனி வசதி செய்துகொடுக்க அங்கிருந்த சிலர் முயன்றபோதும் மறுத்துவிட்டார். துன்பபட்ட தனது தேசத்தின் குடிமக்களுடன் சேர்ந்து வாழ்வைப் பகிர்ந்துகொள்வதில் அவர் இன்பமடைந்திருந்தார்.

பல்கலைக்கழகத்திலிருந்து தனது கிராமமான வதிரிக்குச் செல்லும் வேளையில், வல்வை வெளியில் இரத்தப் புற்றுநோய் தாக்கிய அந்த உடம்பை வைத்து அந்த பேராசான் மிதிவண்டியுடன் போராடும்போது, வாகனத்தில் அவரை முந்திச் செல்ல முனையும் போராளிகள், கண்ணிவெடி வயலில் கடப்பதுபோல நெளிந்து மனங்குமைந்தபடி கடப்பர். மனம் வராது கீழிறங்குபவர்களைப் பார்த்து வெள்ளை மனதுடன் விடிகொடுக்கும் அந்தப் பண்பு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும்.

யாழ்.பல்கலைக்கழக கட்டடமொன்றில், ‘துணைவேந்தர்’ என்ற பெயர்பலகையுடன் அதியுயர் அதிகாரத்தையும் கொண்ட அந்த அறையினுள் பேராசிரியர் இருக்கும்போது, பாலர் வகுப்பறை போன்றே அது தென்படும். பல்கலைக்கழக மாணவர்கள் சிற்றூழியர்கள் சகஜமாக உள்ளே போவதும், சந்தோசமாக உரையாடுவதும், சிரித்த முகத்துடன் வெளியே வருவதும் வழமையான காட்சிகள்.

சாதாரணமாக இத்தகைய உயர் பதவியில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கவே சிரபப்படும் நிலையில், அன்றாடம் இவரை எல்லோரும் சிரமமின்றிப் பார்த்தனர்; அவருடன் பேசினார்.

அவரது சொந்தக் கிராமத்திலும் உயர எழுப்பிய மதில்சுவருக்குள் சிறையிலிருந்து, மக்களிடமிருந்து அன்னியப்பட்டு அவர் வாழவில்லை.

சனசமூக நிலையம் சென்று பத்திரிக்கை வாசித்தார்; குடும்பத்தாருடன் சேர்ந்து தோட்டம் செய்தார்; கிராமத்து வீதிகளில் நின்றபடி மக்களுடன் அன்றையப் புதினங்களைப்பற்றிக் கதைத்தார்; மக்களுடன் மக்களாகவே வாழ்ந்தார்.

யாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு கொழும்பு திரும்ப ஒரு சில நாட்கள் முன்னர் பேராசிரியரை அழைத்த புலிகளின் அரசியல் துறையினர், அவரது சேவையைப் பாராட்டும் முகமாக ஒரு விருந்துபசாரம் நடாத்தி அவரைக் கௌரவித்தனர். தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்குகொண்ட அந்த நிகழ்வில் பேராசிரியர் துறைராசாவும் உரையாற்றினார்.

வழமைபோலவே போராட்டத்தின் தேவை பற்றியும், சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை பற்றியும், தன்னிறைவான பொருளாதாரத்தின் அவசியம்பற்றியும் பேசினார். அப்பேச்சின் ஒரு கட்டத்தில்…..,

“……..எமது இனத்தின் விடுதலைக்காக தங்களது உயிரைத் தியாகம்செய்ய ஆயத்தமாக இருக்கும் புலிகளுக்கு, நான் தலை சாய்த்து வணக்கம் செலுத்த விடும்புகின்றேன்” என்று, தனது தூய நாவால் போராளிகளை மதித்து உரையாற்றிய அந்தப் பெருந்தகை, எம்மைவிட்டு நிரந்தரமாகவே பிரிந்துவிட்டார்.

பேராசிரியர் துரைராசா அவர்கள், புலமையும் பரந்த பார்வையும் கொண்ட பேராசான் மட்டுமல்ல….,

தமிழ் மக்களின் இதயங்களைக் கவர்ந்தெடுத்த ஒரு மக்கள் சேவகன் மட்டுமல்ல……,

தமிழீழ அன்னைக்குத் தொண்டு செய்த அதன் தவப்புதல்வன்.

தமிழீழ அன்னைக்கு வலுச்சேர்க்கப் பாடுபட்ட ஒரு தேசப்பற்றாளன்.

ஒரு உண்மை மனிதன்.

தமிழினத்தின் கல்வியில் அவரது சேவை ஒரு கலங்கரை விளக்கு.

உலகக் கல்விமான்கள் மத்தியில் அவர் ஒரு அறிவுப் பழம்.

எமது மக்களின் உரிமைகள் பற்றிப் பேசும்போது அவர் ஒரு போராளி.

அவரது கிராமத்திலோ வேட்டி கட்டிய ஒரு விவசாயி.

இவ்விதம் மக்களின் அனைத்து மட்டங்களிலும் தனது பண்பான, நேர்மையான, பணிவான, சேவையால் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட பேராசிரியரின் திடீர் மறைவு, தமது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்துவிட்ட தவிப்பைத்தான் மக்கள் ஒவ்வொருவரிலும் ஏற்படுத்தியுள்ளது.

தனது உணர்வை வெளிப்படுத்த வதிரிக் கிராமத்தின் அந்த முதியவர் பயன்படுத்திய வார்த்தைகளில்தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது!

“பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும்!”

-நினைவுப்பகிர்வு:- எல்லாளன். வெளியீடு :விடுதலைப்புலிகள் இதழ்

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”