"இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாம் "அற்புதம்மாள் உருக்கம்.!

breaking
எழுவர் விடுதலையில் இனியும் எங்களை ஏமாற்ற வேண்டாமென பேரறிவாளனின் தாயான அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 28 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்நிலையிலேயே இவர்களின் விடுதலை குறித்து, அற்புதம்மாள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, ஏழு பேர் விடுதலையில் மாநில உரிமையை பயன்படுத்த முடியாத ஒரு மாநிலத்தில் நான் வாழ்ந்து வருவது மிகவும் கவலையளிக்கின்றது. மேலும்,  28 ஆண்டுகளாக எனது மகன் மட்டுமல்ல எங்கள் குடும்பமும் தண்டனையை அனுபவித்து வருகின்றது. இதேவேளை விடுதலை செய்ய முன்வராத யாரையும் தவறாக பேசக்கூடாதென பேரறிவாளன் என்னிடம் கூறியுள்ளார். இவ்வாறு எந்ததொரு தவறும் புரியாத எனது மகன் பல வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வருவது பெரும் வேதனையை தருகின்றது. தேர்தல் முடிந்தும் கூட  7 பேரை விடுவிக்காமல் அரசு அமைதியாக இருக்கின்றது. இருப்பினும் எனது மகனை இன்னும் சிறிது காலம் பொறுமையாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளேன். ஆனால் நான் அமைதியாக இருக்க முடியாது. அதிகமாகவே ஏமாற்றமடைந்து விட்டேன். இனியும் எங்களை ஏமாற்றாமல் அவர்களை உடனடியாக விடுதலை செய்ய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அற்புதம்மாள்  உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளார்.