யாழ் அராலியில் கிணற்றில் ஒயில் ஊற்றிய விசமிகள்!

breaking
யாழ்.அராலி துறையில் உள்ள நன்னீர் கிணற்றில் விசமிகள் ஒயில் ஊற்றியமையால், அப்பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரினை பெற சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். கடலை அண்டிய அராலித்துறை பகுதி நீர் உவர் நீராக காணப்படுகின்றது. அவர்களின் குடியிருப்புக்கு சற்று தொலைவில் அமைந்துள்ள பொதுக்கிணற்றில் நன்னீர் காணப்படுவதால், அப்பகுதியில் உள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் அக்கிணற்று நீரினையே பெற்று வந்தனர். அந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இரவு விசமிகள் கிணற்றினுள் ஒயிலை ஊற்றியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் குடிநீருக்கு பெரும் சாவலை எதிர்கொண்டு நீண்ட தூரத்துக்கு சென்று நீரினை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதேவேளை சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார், வலி.மேற்கு பிரதேச சபை உள்ளிட்டோரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும், விரைந்து கிணற்றினை சுத்தம் செய்து தருமாறும், ஒயில் கலந்தவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.