ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்களை ஓன்றுபட கோருகிறார் அனுரகுமார

breaking
  ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மக்களும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என ஶ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பாராளுமன்ற தெரிவுக் குழுவின் விசாரணைகளை நாட்டு மக்கள் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். கடந்த நான்கு வருடத்தில் அரச தலைவர்களின் முறையற்ற செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை கொண்டு அடுத்த முறை முறையான அரசியல் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும். ஜனநாயத்தையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதியை முழுமைப்படுத்தவில்லை. அடிப்படைவாதிகளின் தாக்குதல் முன்கூட்டியே அறிந்திருந்தும். அவை தொடர்பில் முறையாக செயற்படாமல் பொறுப்பற்ற விதமாக இருந்தமையின் விளைவே பல உயிர்களை பலியெடுத்துள்ளது. இதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் பொறுப்பு கூற வேண்டும். நாட்டு மக்களை பாதுகாக்க தவறிய அரச தலைவர்கள் இருவரும் தொடர்ந்து பதவி வகிக்க தகுதியற்றவர்கள். ஆகவே முறையான அரசாங்கத்தை ஏற்படுத்த நாகரிகமான முறையில் இடமளிக்க வேண்டும். தமக்கான அரசாங்கத்தை நாட்டு மக்களே தீர்மானித்துக் கொள்வார்கள் எனவும் இவர் இதன்போது குறிப்பிட்டார். மக்கள் விடுதலை முன்னணியினர் இன்று கொழும்பு, கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். குறித்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.