சென்னை ரயில்நிலையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு .!

breaking
சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தின் 2வது நடைமேடையில்  கூட்டுறவுத்துறை ஊழியரான தேன்மொழி என்ற இளம்பெண்ணிடம்  ஈரோட்டைச்சேர்ந்த சுரேந்தர் என்ற இளைஞர்  நேற்று இரவு 8 மணி அளவில் வெகுநேரமாக பேசிக்கொண்டிருந்தார்.  இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் செய்துகொண்டிருந்தனர்.   அப்போது திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தேன்மொழியை வெட்டினார்.   இதில், இளம்பெண் தேன்மொழி அலறித்துடித்ததும் அப்போது கடற்கரைக்கு செல்லும் மின்சாரயில் முன் பாய்ந்து சுரேந்தர் தற்கொலைக்கு முயன்றார். கத்திக்குத்தில்  படுகாயமடைந்த தேன்மொழி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், ரயிலில் அடிபட்டு படுகாயமடைந்த சுரேந்தர் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையிலும்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேன்மொழியும், சுரேந்தரும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள் என்பதும், காதலித்து வந்தவர்கள் என்பதும், தேன்மொழி எழும்பூரில் உள்ள மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார் என்பதும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சேத்துப்பட்டு ரயில் நிலையத்திற்கு அடுத்த ரயில் நிலையமான நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 2016ம் ஆண்டு இதே போல்தான் சுவாதி என்ற இளம்பெண்ணிடம் வெகுநேரம் வாக்குவாதம் செய்த ராம்குமார், திடீரென தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுவாதியை சரமாரியாக வெட்டிகொலை செய்துவிட்டு தப்பித்துச்சென்றான் என்பது குறிப்பிடத்தக்கது.