`மனித உரிமை குறித்து பேசினாலே படுகொலைதானா.?

breaking
நெல்லையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த அசோக் என்ற இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியைக் கிளப்பியது. `ஒடுக்கப்பட்ட மக்களின் விழிப்புணர்வுக்காகவும் பாடுபடும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் உயிருக்குத் தொடர் அச்சுறுத்தல் நிலவுகிறது. இந்த வகையில் ஒவ்வோர் ஆண்டும் 15 முதல் 20 பேர் வரையில் கொல்லப்படுகின்றனர்' என அதிர்ச்சிப் புள்ளி விவரத்தை வெளியிடுகிறார் மதுரையைச் சேர்ந்த எவிடென்ஸ் அமைப்பின் நிர்வாகி கதிர். திருநெல்வேலி மாவட்டம் கையிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக். இவர் கடந்த 12-ம் தேதி இரவு 10.15 மணியளவில் ஒரு கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து தச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்து பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்படப் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக, நேரிடையாக களத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினார் எவிடென்ஸ் கதிர். ஆய்வுக்குப் பின்னர், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து நம்மிடம் விரிவாகப் பேசினார். ``இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டப் பொருளாளரான அசோக், அந்தப் பகுதியில் கட்டப் பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் போன்ற வன்முறைகளுக்கு எதிராகப் போராடி வந்தவர். இவரது படுகொலைக்குத் தனிப்பட்ட காரணம் மட்டுமல்ல, மக்களின் உரிமைகளுக்காகப் போராடியதால் வன்மம் கொண்ட கும்பல் இந்தக் கொலையைச் செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அசோக் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி தனது தாயாருடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது அசோக் கொண்டு வந்த புல்லுக்கட்டு, அங்கு நின்றிருந்த பேச்சிராஜா மற்றும் அவரது உறவினர்கள் மீது உரசியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல் அசோக் மற்றும் அவரது தாயாரைத் தாக்கியுள்ளனர். தான் தாக்கப்பட்டது தொடர்பாக அசோக், தச்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையே பேச்சிராஜாவின் உறவினரான இசக்கிமுத்து என்ற இளைஞர், அசோக் மீது பொய் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். தொடர்ந்து அசோக் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இசக்கிமுத்து கொடுத்த முதல் தகவல் அறிக்கையில் 7 பேர் தன்னை தாக்கியதாகச் சொன்னவர், சற்று நேரத்தில் அசோக் மட்டும்தான் தாக்கினார், 7 பேர் தாக்கியதாகப் பதற்றத்தில் தவறாகக் கூறிவிட்டேன் எனத் தெரிவித்துள்ளார். அதன் விவரமும் எஃப்.ஐ.ஆரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் அது பொய் வழக்கு எனத் தெரிய வருகிறது. காவல்துறையினர் இந்த வழக்கினை ரத்து செய்திருக்கலாம், ஆனால் அப்படிச் செய்யவில்லை. இந்நிலையில் அசோக், கடந்த 12 -ம் தேதி இரவு வேலைக்குச் செல்வதற்காக கையிருப்புப் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தபோது பேச்சிராஜா, ராமச்சந்திரா, மூக்கன், கணேசன், பாலு, முருகன், சுப்பிரமணியன் உள்ளிட்ட சிலர் அரிவாளுடன் வந்து அசோக்கை சாதிரீதியாக இழிவாகப்பேசி வெட்டிக் கொலை செய்துள்ளனர். பின்னர் ரயில்வே தண்டவாளத்தில் அசோக்கின் உடலை வீசிவிட்டுத் தற்கொலை போன்று சித்திரிப்பதற்கான வேலைகளையும் செய்துள்ளனர். இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளும் உள்ளனர். இந்தக் கொலை தனிப்பட்ட பிரச்னை சார்ந்து நடத்தப்படவில்லை. வன்கொடுமை வழக்கினைப் பதிவு செய்து, குற்றவாளியைக் கைது செய்ய வைத்த ஆத்திரத்தாலும் மக்களிடம் அரசியல்ரீதியான விழிப்புணர்வினை ஏற்படுத்திய காரணத்துக்காகவும் கொல்லப்பட்டார். கொலை செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; கொல்லப்பட்ட அசோக்கின் குடும்பத்துக்கு அரசு உதவி செய்ய வேண்டும் " என வேண்டுகோள் வைத்தவர், ``தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பட்டியலின மனித உரிமைக் காப்பாளர்கள் 15 முதல் 20 பேர் வரையில் கொல்லப்படுகின்றனர். மக்களின் நலனுக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பணி செய்பவர்கள் கொல்லப்படுவது கடும் கண்டனத்திற்குரியது" என ஆவேசப்பட்டவர், அவ்வாறு கொல்லப்பட்டவர்களின் பட்டியலையும் விவரித்தார்.