மீண்டும் கூடவுள்ள ஶ்ரீலங்கா நாடாளுமன்ற தெரிவுக்குழு; இம்முறை காவல்துறையிடம் விசாரணை

breaking
  ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்பையும் மீறி செயற்பட்டு வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது. அதன்படி அந்தக் குழுவின் ஆறாவது அமர்வு எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அன்றைய தினம் காத்தான்குடி காவல்துறையில் சேவையாற்றிய முன்னாள் பொறுப்பதிகாரி, தற்போதைய பொறுப்பதிகாரியும் சுபீ முஸ்லிம் அமைப்பின் பிரதிநிதிகளும் சாட்சியம் வழங்கவுள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு இதுவரையில் ஐந்து தடவைகள் கூடியுள்ளது. இதுவரை இடம்பெற்ற அமர்வுகளில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி சிசிர மெண்டிஸ் மற்றும் நாலக டி சில்வா, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரிடம் சாட்சியம் பெறப்பட்டுள்ளன. இவர்கள் வழங்கிய சாட்சியங்கள் மூலம் பல உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இதனையடுத்து நாடாளுமன்றத் தெரிவுக்குழுவிற்கு எதிர்ப்புகளும் வெளியிடப்பட்டன. குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவுக்குழுவின் செயற்பாடுகளை நிறுத்துமாறு கோரியிருந்தார். எனினும் சர்ச்சைகளுக்கு மத்தியில் குறித்த குழுவின் செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.