கோவை போலீசாரால் ஐ.எஸ். ஆதரவாளர்கள் 3 பேர் நேற்று கைது

breaking
  ஶ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல்களில் சக்திவாய்ந்த தொடர் குண்டு வெடிப்புகள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். ஶ்ரீலங்கா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜஹரான் ஹசிமினுடன் சமூக வலைத்தளங்கள் மூலம் கோவையை சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு அதிகாரிகள் (என்.ஐ.ஏ.) கடந்த 12-ந் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் கோவை உக்கடம் பகுதியில் 7 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தி தோட்டாக்கள், செல்போன்கள் உள்பட பல்வேறு மின்னணு சாதனங்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை அவர்கள் கைது செய்தனர். 3 பேருக்கு சம்மன் அனுப்பி கொச்சிக்கு வரவழைத்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கிடையில் கோவையை சேர்ந்த 3 பேர் தடை செய்யப்பட்ட பயங்கரவாத ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்படுவதாக கோவை மாநகர நுண்ணறிவு போலீசார் மற்றும் சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி.) போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. அதன்பேரில் கடந்த 13-ந் தேதி கோவை தெற்கு உக்கடம் அன்பு நகரை சேர்ந்த ஷாஜகான்(வயது 25), கோவை வின்சென்ட் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் முகமது உசேன்(25), கோவை கரும்புக்கடை சாரமேடு பகுதியை சேர்ந்த ஷேக் சபியுல்லா (36) ஆகிய 3 பேரின் வீடுகளில் கோவை போலீசார் சோதனை நடத்தினர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் மருந்து விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றி வருவது தெரிய வந்தது. போலீசாரின் சோதனையில் 3 பேரின் வீடுகளில் இருந்தும் செல்போன்கள், சிம் கார்டுகள், கணினி ஹார்டு டிஸ்குகள், பென் டிரைவ், மெமரி கார்டுகள் மற்றும் வங்கி கணக்கு ஆவணங்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளை பற்றிய கையேடுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்கள் 3 பேரையும் கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள நுண்ணறிவு பிரிவு அலுவலகத்துக்கு அழைத்து வந்து கடந்த 13 மற்றும் 14 ஆகிய 2 நாட்களாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். அப்போது, 3 பேரின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் ஐ.எஸ். ஆதரவாளர்கள் என்ற குற்றச்சாட்டு நிரூபணமானது. இதைத்தொடர்ந்து ஷாஜகான், முகமது உசேன், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று காலை 8 மணியளவில் கைது செய்தனர். அவர்களை வேனில் ஏற்றி கோவை ரேஸ்கோர்சில் உள்ள மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் வீட்டுக்கு போலீசார் அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் வருகிற 28-ந் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சக்திவேல் உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்களை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவு (உபா) 18, 38, 39-ன் கீழ் போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 3 பேர் கைது செய்யப்பட்டது குறித்து கோவை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கைது செய்யப்பட்ட 3 பேரும் ஐ.எஸ். அமைப்பின் பலத்தை கோவையில் காட்டவும் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் ஐ.எஸ். அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்டதற்கும் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருந்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவைப்பட்டால் இவர்களை காவலில் எடுத்து விசாரிப்போம். இதற்கான மனுக்கள் 15 நாட்களில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டப்பிரிவின் (உபா) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதால் இந்த வழக்கு எதிர்காலத்தில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட வாய்ப்புள்ளது. இதுபற்றி மத்திய உள்துறை அமைச்சகம் தான் முடிவு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.