நண்பர்களுடன் கடலுக்கு சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

breaking
  தனது நண்பர்களுடன் இன்று ஞாயிற்றுக் கிழமை (16) நண்பகல் கடலில் நீராடச் சென்ற மாணவன் ஒருவன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தலைமன்னார் மேற்கு பகுதியைச் சேர்ந்த இளங்குமரன் அஜேய் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இன்று பகல் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய பின் நண்பகல் தலைமன்னார் மேற்கு கடல் பகுதிக்கு நீராடச் சென்றுள்ளனர். இந்நிலையில் இவர்கள் நீராடிக் கொண்டிருந்தபோது கடலில் நங்கூரமிடப்பட்டிருந்த படகை தொட்டுவிட்டு வருகின்றேன் என கூறிச் சென்ற வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரிவிக்கப்படுகிறது. நீந்தி சென்ற தமது நண்பன் காணாமல் போனதை தொடர்ந்து நண்பர்கள் கிராமத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து கிராமத்து மீனவர்கள் அடசு வலை மூலம் காணாமல் போன மாணவனை சடலமாக மீட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த மாணவனின் சடலம் தற்பொழுது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன் தலைமன்னார் பொலிசார் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.