குடிதண்ணீர் பஞ்சத்தால் குழந்தைகளை பறிகொடுத்த கிராமம்.!

breaking
தமிழ்நாட்டில் குடிதண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டது. குடிதண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய சொல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது.

தொடர் மணல் கொள்ளை, நீர்நிலைகளை மராமத்து செய்யாமல் அரசுகள் காட்டிய அலட்சியம், அதிகாரிகளின் துணையோடு நடந்த நீர்நிலை ஆக்கிரமிப்புகள், குடிமராமத்து என்ற பெயரில் பெயருக்கு செய்துவிட்டு காகித்த்தில் கணக்குகள் மட்டும் எழுதிய நிலை.. இப்படி பலகாரணங்களால் இன்று தமிழகம் குடிதண்ணீருக்காக தட்டுக்கெட்டு நிற்கிறது. ஆனாலும் இன்னும் அதிகாரிகளும், அரசும் மணல் கொள்ளைக்கும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கும் உதவியாகவும் துணையாகவும் தான் உள்ளது. அதனால் மேலும் தண்ணீர் தட்டுப்பாடு வரப் போகிறது.

    இப்படி குடிதண்ணீருக்காக ஏற்பட்டுள்ள பஞ்சம் அடுத்தடுத்து உயிர்பலிகளையும் கேட்கத் தொடங்கிவிட்டது. கடந்த வாரம் தஞசையில் ஒவ்வொரு வீட்டுக்கும் சில குடங்கள் தண்ணீர் என்று பிடித்துக் கொண்டிருந்த போது ஒரு வீட்டில் இருந்து பல குடங்களுடன் தண்ணீர் பிடிக்க வந்த்தை தட்டிக் கேட்ட ஒரு இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் வைத்தூர் கிராமத்தில் சுமார் ஆயிரம் குடும்பங்களில் 5 ஆயிரம் மக்கள் வசித்தாலும் அவர்களுக்கும் தேவையான குடிதண்ணீரை ஊராட்சி நிர்வாகத்தால் வழங்க முடியவில்லை. கொஞ்சம் கொஞம் வரும் குடிதண்ணீரை பலரும் மோட்டார் வைத்து உறிஞ்சிவிடுவதால் பலரும் வீட்டுக்கு வீடு ஆழமான குழிகளை தோண்டி அதிலிருந்த தண்ணீரை எடுக்கும் நிலையில் உள்ளனர். இதனால் பல நேரங்களில் பலர் அந்த குழிகளில் விழுந்து காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தான் சனிக்கிழமை மாலை புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களிலும் மழை பெய்த்து போல வைத்தூர் கிராமத்திலும் மழை பெய்து குடிதண்ணீருக்காக தோண்டப்பட்ட குழிகளில் மழைத் தண்ணீர் நிறைந்து காணப்பட்டது.

அப்படித்தான்.. அதே பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் – வெண்ணிலா தம்பதிகளில் மகள் பவதாரணி (வயது 3) தனது பாட்டி வீட்டிற்கு சென்றுவிட்டு மழை விட்டதும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். நீண்ட நேரமாக பவதாரணியை காணவில்லை என்று பெற்றோர் பாட்டி வீட்டிற்கு தேடிச் சென்றனர். அங்கிருந்து ஒரு பையுடன் வந்துவிட்டதாக சொன்னார்கள். அதன் பிறகு அந்த பகுதி மக்கள் சேர்ந்து தேடினார்கள்.

எங்கும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு இடத்தில் குடிதண்ணீருக்காக தோண்டப்பட்ட குழியில் மழைத் தண்ணீர் நிறைந்திருக்க அந்த குழி அருகே பவதாரணி கொண்டு வந்த பை மட்டும் கிடந்ததால் அந்த குழிக்குள் இறங்கி தேடினார்கள் குழந்தை தண்ணீருக்கும் கிடந்தது. கதறிக் கொண்டு புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். ஆனால் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். அதன் பிறகு குழந்தையை வீட்டிற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர்.

இந்த சம்பவம் அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறும் போது.. ஊராட்சி நிர்வாகம் முறையாக குடிதண்ணீர் கொடுத்திருந்தால் நாங்கள் என் குழி வெட்டணும். இப்படி குழந்தையை பறிகொடுக்கணும். குடிதண்ணீருக்காக இப்ப ஒரு அழகான குழந்தையை பறிகொடுத்துவிட்டோம். மறுபடியும் எந்த உயிரையும் பறிக்காமல் குடிதண்ணீர் கிடைக்க வழி செய்ய வேண்டும் என்றனர்.