நள்ளிரவில் எரியூட்டப்பட்ட ரயர்கள் : தேடுதல் நடவடிக்கையில் ஶ்ரீலங்கா இராணுவம்

breaking
  தென்தமிழீழம்: கல்முனை தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நள்ளிரவில் ரயர் எரிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து ஶ்ரீலங்கா இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். இன்று (19) காலை நற்பிட்டிமுனை சந்தி கிட்டங்கி வீதி உள்ளடங்களாக பொதுக்கட்டடங்கள் தனியார் கல்வி நிலையங்கள் கடைகளில் குறித்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நேற்று (19) நள்ளிரவு நற்பிட்டிமுனை கிட்டங்கி வீதிகளில் ஒரு குழுவினர் ரயர்கள், மரக்கட்டைகளை வீதியின் குறுக்காக இட்டு தீயிட்டு விட்டுத் தப்பி சென்றனர். இதனால் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து காவல்துறையினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற கல்முனைப் காவல்துறையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடிக் கண்டுபிடிக்க இராணுவம், காவல்துறையினர் சிசிரிவி காட்சிகளை மையப்படுத்தி விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திலிருந்து 1 கிலோமீற்றர் தூரத்தில் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.அத்துடன் குறித்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவாக கிழக்கில் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி கல்முனையில் மூன்றாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுவரும் உண்ணாவிரதப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை 20 ஆம் திகதி கிழக்கு மாகாணத்தில் கடையடைப்பு செய்து ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவை எனும் அமைப்பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.