இலங்கை அரசியலில் மீண்டும் ஒரு புயலோ, பூகம்பமோ உருவாவதற்கான கரு ‘சூல்’ கொள்ளத் தொடங்கிவிட்டது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர், ஐ.தே.மு அரசாங்கமும், ஜனாதிபதியும் எந்தப் பிணக்குமின்றி இருப்பது போலக் காட்டிக் கொண்ட போலியான நிலை இப்போது விலகிக் கொண்டிருக்கிறது.
இந்த போலித் திரையை விலக்கி வைப்பதற்கு காரணியாக அமைந்திருக்கிறது, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கான பாராளுமன்றத் தெரிவுக்குழு.
இந்த தெரிவுக்குழு அமைக்கப்பட்ட போது, இதன் பாரதூரத் தன்மையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்கிக் கொள்ளவில்லை.
ஆனால், அவரையும், மஹிந்த தரப்பையும், பொறிக்குள் தள்ளுவதற்கென்றே, ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த தெரிவுக்குழுவை உருவாக்கியிருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
அந்தப் பொறியை இன்றும் வலுவானதாக மாற்றும் வகையில், வழக்கத்துக்கு மாறாக - இதுவரை நடந்திராத வகையில், பகிரங்கமாக விசாரணைகளை நடத்த, சாட்சியங்களைப் பெற அனுமதி கொடுத்திருந்தார் சபாநாயகர் கரு ஜயசூரிய.
ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தபோது, அதனை முறியடிப்பதற்கான ஆயுதமாகவும் அரசாங்கம் இந்த தெரிவுக்குழுவைப் பயன்படுத்திக் கொண்டது.
தெரிவுக்குழுவின் முதல் நாள் அமர்வில், பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவும், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸும் சாட்சியம் அளித்த பின்னர் தான், ஜனாதிபதி நிலைமையின் தீவிரத் தன்மையை உணர்ந்தார்.
தனது அதிகாரத்தை வைத்து நேரடிச் சாட்சியங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படாமல் தடுக்க முனைந்தார்.
ஆனாலும், எல்லா ஊடகங்களும் வரிக்கு வரி சாட்சியங்களை வெளியிட்ட போது தான், தமது தோல் தான் உரிக்கப்படுகிறது என்று ஜனாதிபதி புரிந்து கொண்டார். அத்துடன் எதிர்க்கட்சியும் தனக்கு வரும் ஆபத்தை உணர்ந்து கொண்டு கூச்சல் போடத் தொடங்கியது.
கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவும், பதவியை விட்டு விலகிய முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்னாண்டோவும் சாட்சியம் அளித்த பின்னர், ஜனாதிபதி இன்னும் கடுப்பானார்.
அதற்குள்ளாகவே அவர், இந்த தெரிவுக்குழு விசாரணையை இடைநிறுத்துமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினார். அவர் அதனை கருத்தில் கொள்ளவில்லை.
பின்னர் அதனை ஒரு குற்றச்சாட்டாக ஜனாதி பதி முன்வைத்த போது, அந்தக் கடிதத்தை பாராளுமன்ற உறுப்பினர்களின் முன் சமர்ப்பிப்பதா இல்லையா என்று தீர்மானிப்பது தனது அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், தெரிவுக்குழு விசாரணையை நிறுத்தும் அதிகாரம் தனக்கு கிடையாது என்றும் கூறியிருந்தார் சபாநாயகர்.
இதற்குப் பின்னர் நிலைமைகள் மோசமடைந்த போது, தான் பணியில் உள்ள எந்தவொரு அதிகாரியையும் தெரிவுக்குழுவின் முன்பாக சாட்சியமளிக்க அனுமதிக்கமாட்டேன் என்று ஜனாதிபதி அறிவித்தார். இதன் பின்பு மீண்டும் மோதல்கள் ஆரம்பமாகின.
அவசரமாக அமைச்சரவையைக் கூட்டிய ஜனாதிபதி, தெரிவுக்குழுவின் விசாரணையை நிறுத்த வேண்டும் என்றும், இல்லாவிட்டால், அமைச்சரவைக் கூட்டம் உள்ளிட்ட எந்தவொரு அரச நிகழ்விலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.
ஆனால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோ, அமைச்சர்களோ அதற்கு இடம்கொடுக்கவில்லை. தெரிவுக்குழுவை நியமித்தது பாராளுமன்றம், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே அதற்கான அதிகாரம் உள்ளது என்று கைவிரித்து விட்டனர்.
தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்த ஜனாதிபதிக்கு எந்த வகையில் அதிகாரம் இல்லையோ அதுபோலத் தான், பிரதமருக்கும், சபாநாயகருக்கும், அமைச்சரவைக்கும் அதிகாரம் கிடையாது.
ஆனாலும், பிரதமரையும், அமைச்சரவையையும் ஜனாதிபதி நெருக்கடி கொடுப்பதற்குக் காரணம், அவர்கள் மனது வைத்தால், பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து விசாரணைகளை நிறுத்த முடியும்.
அப்படியானதொரு முடிவை எடுக்கின்ற நிலையில் ஐ.தே.மு அரசாங்கம் இல்லை. ஏனென்றால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னைய அரசாங்கத்தில் இருந்த கோத்தாபய ராஜபக் ஷவுக்கு உள்ள தொடர்புகளை அம்பலப்படுத்த இந்த விசாரணை முக்கியமானது.
இந்த விசாரணைகளின் மூலம், அரசாங்கம் 100 பறவைகளை வீழ்த்தி விட்டது என்று கொதித்திருக்கிறார் மஹிந்த ராஜபக் ஷ. அவர் சொல்வது சரி தான்.
இப்போது மத்திய வங்கி மோசடி மறந்து விட்டது. ஈஸ்டர் தாக்குதல் மறந்து விட்டது. ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரணைகள் மறந்து விட்டன. இப்படியே பல்வேறு பிரச்சினைகள் மறந்து விட்டன. பல மூடி மறைக்கப்பட்டு விட்டன.
அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சி பெரும்பாடுபட்டு கொண்டு வந்த பிரச்சினைகளை எல்லாம் இப்போது தெரிவுக்குழு தூக்கித் தின்று விட்டது. இதுதான் மஹிந்தவின் பிரச்சினை.
ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்று சொல்வதைப் போல ஒரு கல்லில் அரசாங்கம் 100 பறவைகளை வீழ்த்தி விட்டது என்று அவர் பொருமியிருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நடக்க வேண்டிய அமைச்சரவைக் கூட்டம் நடக்கவில்லை. இந்த நிலை எதுவரை தொடரப் போகிறது என்று தெரியவில்லை.
அடுத்தவாரம் அமைச்சரவைக் கூட்டம் நடக்கும் என்று கூறப்பட்டாலும், அது இந்தப் பத்தி எழுதப்படும் வரை உறுதியாகவில்லை.
பாராளுமன்றத்தை முடக்கி அல்லது இப்போதைய கூட்டத்தொடரை ஒத்திவைத்து, தெரிவுக்குழு விசாரணைகளை நிறுத்தக் கூடும் என்றொரு கதையும் அடிப்பட்டது. ஆனால், பொதுவாக, ஒரு கூட்டத்தொடரில் அமைக்கப்படும் தெரிவுக்குழுக்கள், அந்தக் கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படுவதுடன் காலாவதியாகி விடும்.
ஆனால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழு அப்படிப்பட்டதன்று. அது விசேட தெரிவுக்குழு. பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றின் மூலம் உருவாக்கப்படும் விசேட தெரிவுக்குழுக்கள் செயலிழந்து போகாது.
இதனால், பாராளுமன்றத்தை ஒத்திவைத்து மீண்டும் மூக்குடைபடும் நிலையை ஜனாதிபதி ஏற்படுத்திக் கொள்ளவில்லை.
அதேவேளை அமைச்சரவைக் கூட்டத்தில், பங்கேற்காமல் ஒதுங்கிக் கொள்ளும் ஜனாதிபதியின் முடிவும் கூட, எந்தளவுக்கு புத்திசாலித்தனமானது என்ற கேள்வி உள்ளது.
ஏனென்றால் அமைச்சரவையை நியமிப்பது, கலைப்பது போன்ற அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு இருந்தாலும், ஜனாதிபதியே அதற்கு கட்டாயமாக தலைமை தாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரதமர் கூட அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்ட முடியும். அவ்வாறான கூட்டங்களும் நடந்திருக்கின்றன.
ஜனாதிபதி அடம்பிடிக்கின்ற நிலையில், பிரதமர் அமைச்சரவையைக் கூட்டி முடிவுகளை எடுக்க முடியும். ஜனாதிபதியின் முடிவுக்கு மாறாக அமைச்சரவை பல முடிவுகளை எடுக்கின்ற போது, ஜனாதிபதி இல்லாமல் அமைச்சரவையைக் கூட்டுவதில் சிக்கல் இல்லை என்கின்றனர் சட்டவல்லுநர்கள்.
இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தொடர்ந்தும் முரண்டு பிடித்தால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டக் கூடும்.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வேறு புகுந்து கொண்டு பாராளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தலுக்கு செல்வதே சிறந்தது என்று கூச்சல் எழுப்பிக் கொண்டிருக்கின்றன.
வெந்த வீட்டில் பிடுங்கியது அறுதி என்பது போல இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்சியைப் பிடிக்க கனவு காண்கிறது மஹிந்த அணி.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.தே.மு அரசாங்கத்துடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள விரிசல் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனை சரி செய்வதற்கு இரண்டு தரப்புகளுமே தயாராக இல்லை.
பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களின் இடத்துக்கு ராஜித சேனாரத்ன, மலிக் சமரவிக்ரம, ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை நியமிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால், ஜனாதிபதி அதனை ஏற்கவில்லை.
அந்தந்த அமைச்சுக்களின் இராஜாங்க அமைச்சர்களாக இருந்தவர்களை பதில் அமைச்சர்களாக நியமித்திருக்கிறார். இது அரசியலமைப்பு மீறல் என்று போர்க்கொடி எழுப்புகிறது ஐ.தே.க.
19 ஆவது திருத்தச்சட்டத்தின்படி, பிரதமருடன் ஆலோசித்தே, அமைச்சர்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும். ஆனால் பதில் அமைச்சர்கள் நியமனம் குறித்து பிரதமருடன் ஜனாதிபதி ஆலோசனை நடத்தவில்லை. அவரது யோசனையையும் புறக்கணித்திருந்தார்.
மற்றொரு சிக்கலும் கிளம்பியிருக்கிறது. ஒரு அமைச்சர் வெளிநாடு சென்றாலோ, சுகவீனத்தினால் செயற்பட முடியாமல் போனாலோ தான், பதில் அமைச்சரை நியமிக்க முடியும். பதவி விலகிய அமைச்சர்களுக்கு பதில் அமைச்சர்களை நியமித்தமை அரசியலமைப்பு மீறல் என்று உச்சநீதிமன்றில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் முயற்சிகள் நடப்பதாகவும் தகவல்.
ஏற்கனவே பாராளுமன்றக் கலைப்பு விடயத்தில், ஜனாதிபதி அரசியலமைப்பை மீறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் மீண்டும் அதேபோன்றதொரு குற்றச்சாட்டு அவரை நோக்கி வந்திருக்கிறது.
இந்த நிலையில், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற கேள்வியும் அச்சமும் சாதாரண மக்களைத் தொற்றிக் கொண்டிருக்கிறது, கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி ஆட்சிக்கவிழ்ப்பும் அதனையடுத்து ஏற்பட்ட குழப்பங்களும் நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தின.
அதனை ஒத்த இன்னொரு நிகழ்வை நாட்டிலுள்ள மக்கள் யாருமே விரும்பவில்லை. எனவே இந்த முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே சாதாரண மக்களின் எதிர்பார்ப்பு.
ஆனால் அரசியல் தலைமைகளோ விட்டுக்கொடுப்புக்கோ, சமரசத்துக்கோ தயாராக இருப்பதாகத் தெரியவில்லை. ஏட்டிக்குப் போட்டியாக நடந்து கொள்கிறார்கள். நாட்டைப் பற்றிய கவலைகளே அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
திடீரென கடந்த புதன்கிழமை 3 நாள் பயணமாக சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார் பிரதமர். அவரையடுத்து மறுநாள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தஜிகிஸ்தானுக்கு புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
நாட்டை நிர்வகிக்க வேண்டிய இரண்டு தலைவர்களும் இல்லாமல், நாடு இருக்கின்ற நிலை பாரதூரமானது, இதுபோன்ற நிலை முன்னரும் ஓரிரு தடவைகள் ஏற்பட்டிருக்கின்றன.
அப்போது நிலைமைகள் அச்சத்துக்குரியதாக இருக்கவில்லை. ஆனால் இப்போது, ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னரும், இரண்டு தலைவர்களும் இல்லாத நிலை என்பது சாதாரணமான ஒன்றல்ல.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்தபோது, ஜனாதிபதி நாட்டில் இல்லாததால், ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பலத்த இழுபறிகள் ஏற்பட்டன. பாதுகாப்புச்சபையைக் கூட்டி முடிவெடுப்பதற்கிடையில் போதும் போதும் என்றாகியிருந்தது.
இப்படியான நிலையில் இரண்டு தலைவர்களும் இல்லாமல் நாடு இருந்த சூழலை நம்பிக்கையின் உச்சமாக எடுத்துக் கொள்வது அபத்தமானது, அதனை முட்டாள்தனமான நம்பிக்கை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதுபோன்ற முட்டாள்தனமான நம்பிக்கை தான், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கும் வழி வகுத்தது என்பதை மறந்து விடக்கூடாது.