வேலூரில் 369 ரவுடிகள் அதிரடி கைது.!

breaking
வேலூர் மாவட்டத்தில் கடந்த நான்கு மாதங்களில் 369 ரவுடிகளை கைதுசெய்து போலீஸார் சிறையில் அடைத்திருக்கிறார்கள். அவர்களில் பயங்கரமான குற்றவாளிகளாகக் கருதப்படும் 35 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. வேலூர் மாவட்டத்தில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், செயின் பறிப்பு போன்ற குற்றச்சம்பவங்கள் நாளுக்குநாள் பெருகிவருகிறது. ரவுடிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிரண்டுபோயிருக்கிறார்கள். பிரபல ரவுடிகளான சத்துவாச்சாரியைச் சேர்ந்த வசூர் ராஜா, வீச்சு தினேஷ், காட்பாடியைச் சேர்ந்த ஜானி ஆகியோர் தலைமையிலான ரவுடி கும்பல்கள் பயங்கரமான ஆயுதங்களுடன் பொது இடங்களில் அடிக்கடி மோதிக் கொள்கின்றன. இந்த நிலையில், ரவுடிகளை ஒடுக்கக் காவல்துறை கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதன் ஒரு பகுதியாக ரவுடிகள் பட்டியலில் இருக்கும் குற்றவாளிகளை கைதுசெய்ய எஸ்.பி பிரவேஷ்குமார் தலைமையிலான போலீஸார் தீவிரம் காட்டினர்.
அதன்படி, கடந்த நான்கு மாதங்களில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 369 ரவுடிகளை போலீஸார் அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறார்கள். இவர்களில் 35 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலீஸாரின் அதிரடியான நடவடிக்கையால் வேலூர் மாவட்டத்தில் ரவுடியிசம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் ரவுடியிசத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பிணையில் வெளிவரமுடியாத வகையில் குண்டர் சட்டத்தில் காவல் நீட்டிக்கப்படும்’’ என்று எஸ்.பி பிரவேஷ்குமார் கடுமையாக எச்சரித்திருக்கிறார்.