பிக்பாஸ் தர்ஷன், லாஸ்லியாவை தெரிந்த உங்களுக்கு இந்த 3 ஈழத் தமிழரை தெரியுமா?

breaking
பிக்பாஸ் சீசன் 3-ல் பங்கேற்றுள்ள லாஸ்லியா, தர்ஷன் ஆகிய ஈழத் தமிழர்களை அறிந்து கொண்ட தமிழகம், பாஸ்கரன், ரமேஷ், செல்வம் என்கிற 3 ஈழத் தமிழர்களைப் பற்றி தெரிந்து கொண்டதா? என குமுறல் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளிநாடுகளில் அதிக பார்வையாளர்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஈழத் தமிழர்கள் 2 பேரை இம்முறை களமிறக்கிவிட்டிருக்கிறது விஜய் டிவி. பிக்பாஸ் சீசன் 3-ல் ஈழத்தமிழ்  செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகியோர் இணைந்துள்ளனர். இது அப்பட்டமான வணிக நோக்கம்தான் என்கிற விமர்சனம் ஒருபக்கம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்தில் இன்னமும் சிறப்பு முகாம்களில் போராடும் ஈழத் தமிழர்களையும் தர்ஷன், லாஸ்லியாவையும் முன்வைத்து முன்னாள் போராளி பாலன் சந்திரன் எழுதிய பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தர்ஷன், லொஸ்லியா, பாஸ்கரன், ரமேஷ், செல்வம் அனைவரும் ஈழத் தமிழர்கள். இதில் தர்ஷன், லொஸ்லியா இருவரும் பிக்பாஸ் நிகழ்வில் கலந்துகொள்வதால் விஜய் ரிவி மூலம் பல கோடி தமிழர்கள் நேற்று முதல் அறிந்துள்ளனர். இந்த இருவரையும் அறிந்துள்ள பல தமிழர்களுக்கு பாஸ்கரன், ரமேஷ், செல்வம் ஆகியோர் யார் என்று தெரிந்திருக்கவில்லை. பிக்பாஸ் பார்ப்பவர்கள் " இப்போது ஈழத்தில் யுத்தம் இல்லை. அந்த தமிழர்கள் இந்தியா வந்து டிவி நிகழ்வுகளில் சந்தோஷமாக கலந்து கொள்கிறார்கள். அதற்கு இலங்கை இந்திய அரசுகள்கூட அனுமதிக்கின்றன" என்றே நினைப்பார்கள். அவ்வாறு உலகில் உள்ள தமிழர்கள் எல்லாம் நினைக்க வேண்டும் என்பதே இலங்கை மற்றும் இந்திய அரசின் விருப்பமாகும். அதற்கு விஜய் டிவி யும் ஒத்துழைக்கிறது.