இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சூத்திரதாரி மசூத் அசார் காயம்.?

breaking
பாகிஸ்தானில் நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவர் மசூத் அசார் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெய்ஷ் இ முகம்மது இயக்கத்தின்  தலைவரான மசூத் அசார்.  இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு சூத்திரதாரியாக விளங்கிய மசூத் அசார் சமீபத்தில் சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டான். பாகிஸ்தானில் சுதந்திரமாக உலவி வரும் இவன்,  உடல் நலக்குறைவு காரணமாக ராவல்பிண்டியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த நிலையில், ராவல்பிண்டி மருத்துவமனையில் வெடி குண்டு தாக்குதல் நடைபெற்றதாகவும் இந்த தாக்குதலில் மசூத் அசார் உள்பட 10 பேர் காயம் அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள பிரபல சமூக ஆர்வலரும், மனித உரிமைகள் ஆர்வலருமான ஆசன் உல்லா மியாகைல் என்பவர் தனது டுவிட்டர் பதிவில், மசூத் அசார் காயம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மசூத் அசார் காயம் அடைந்தது தொடர்பான செய்திகளை வெளியிடக்கூடாது என்று அந்நாட்டு ஊடகங்களுக்கு பாகிஸ்தான் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அளிக்க பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் மறுத்து விட்டனர்.  இந்த தகவல்களை உறுதி செய்யும் முயற்சியில் இந்திய உளவுத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.