அரசே மக்களைக் குடிகாரர்களாக்கிவருகிறது - கோவை சம்பவத்தால் கொதித்த சீமான்.!

breaking
'மதுபானக்கடையை மூடக்கோரி போராடிய மருத்துவர் ரமேஷுக்கு, நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும். அவரது குடும்பம் போல இனியொரு குடும்பம் பாதிக்கப்படாதிருக்க, உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்' என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``கோவை ஜம்பு கண்டி பகுதியில் இருக்கும் மதுபானக்கடையில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்த நபரால், சமூகப் போராளியும் மருத்துவருமான கோவை ரமேஷ் அவர்களின் மனைவி ஷோபனா விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே மரணமுற்ற செய்திகேட்டு மிகுந்த அதிர்ச்சியுற்றேன். பதைபதைக்கவைக்கின்ற இக்கொடுமையான சம்பவத்தில் மருத்துவர் ரமேஷின் மகள் சாந்திதேவியும் பலத்த காயம் அடைந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மக்களின் நலன் காக்கவேண்டிய மாநில அரசே மதுபானக் கடைகளைத் திறந்து, மக்களைக் குடிகாரர்களாக்கிவருகிற பேரவலம் தொடர்ச்சியாக இந்த மண்ணில் நடந்துவருகிறது. மதுவிலக்கு கேட்டு மக்கள் நலன் சார்ந்த அரசியல் அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ச்சியாகப் போராடிவருகிறோம். ஆனால், தமிழ்நாடு அரசு இதனைக் கண்டுகொள்ளாமல், தனக்கு வருவாய் வருகிற மிகப்பெரும் வழியாக டாஸ்மாக் மதுபானக் கடைகளைக் கருதி, ஓர் அறிவான சமூகமாக தமிழ்ச் சமூகத்தை உருவாக்க, தெருவெங்கும் படிப்பகங்களைத் திறக்காமல் குடி நோயாளிகளை உருவாக்க வீதிதோறும் குடிப்பகங்களைத் திறந்துவைத்து, இந்த மண்ணையும் மக்களையும் பாழ்படுத்திவருகிறது. நாடெங்கும் பரவலாக மதுபானக்கடைகளைத் திறந்துவருகிற தமிழ்நாடு அரசின் சீர்கெட்ட செயல்பாடுகளால் இன்று  ஓர் உயிர் பறிபோவிட்டது. மதுவைக் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவன், மனித வெடிக்குண்டுக்குச் சமம் என்கிறது உயர் நீதிமன்றம். அத்தகைய ஒரு குடிநோயாளியாலும், அக்குடிநோயாளியை உருவாக்கிவிட்ட அரசாலும்தான் இன்றைக்கு மருத்துவர் ரமேஷின் குடும்பமே நிலைகுலைந்து நிற்கிறது.தெருவெங்கும் மதுபானக்கடைகளைத் திறந்துவைத்து, குடிகாரர்களால் மக்கள் உயிருக்கு உலை வைத்திருப்பது என்பது தமிழ்நாடு அரசாங்கம் நேரடியாக மக்கள் நலவாழ்வின்மீது இழைத்திருக்கின்ற ஆகப்பெரும் கொடுமை. மதுபானக் கடையில் குடித்துவிட்டு வந்த நபரால், தன் மனைவியின் உயிரை இழந்த மருத்துவர் ரமேஷ், சடலத்தோடு வீதியில் இறங்கி மதுபானக்கடையை மூடப்போராடியது என்பது மிகுந்த வலியைத் தருகிறது. காயம்பட்ட தனது மகளைக்கூட பார்க்கச் செல்லாமல் தனியொரு ஆளாய் நின்று போராடி, அம்மதுபானக்கடையை மூடுவதாக அரசை அறிவிக்க வைத்திருக்கிறார். கோவை மருத்துவர் ரமேஷ் அவர்கள், எனது நீண்டகால நண்பர். பேரழிவுகளை ஏற்படுத்துகிற நாசகாரத் திட்டங்களை ஆய்வுசெய்து, அதற்கெதிராகக் குரல்கொடுத்துப் போராடிவருகிற சமூகப் பற்றாளர். அவரது உற்ற துணையாக விளங்கிய மனைவியை இழந்து வாடும் அருமை நண்பர் ரமேஷுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மிகவும் சிக்கலான இத்தருணத்தில் மருத்துவர் ரமேஷ் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக நிற்கும் என உறுதியளிக்கிறேன்.
இதுபோன்ற உயிரிழப்புகள் இனியும் ஏற்படாமலிருக்க, இனிமேலாவது மதுவிலக்கை செயற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை அரசு உடனடியாக விரைந்து தொடங்க வேண்டும் எனவும், மதுவிலக்கை அமல்படுத்தும் வரை உடனடி தற்காலிக நடவடிக்கையாக மதுபானக் கடைகளை மக்கள் வசிப்பிடங்களில் இருந்து மக்கள் அதிக நடமாட்டம் இல்லாத, ஆபத்தில்லாத இடங்களுக்கு மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்” என்றார்.