மைதிரியின் பேச்சுக்கு சி.வி.கே.பதில் வீச்சு!

breaking
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் போதைப் பொருள் வியாபாாிகளுடன் நேரடியாக தொடா்புகளை கொண்டிருந்தாா் என்றால், ஒரு போராளியாவது போதை பொருளுடன் பிடிபட்டுள்ளாரா? நீதிமன்றில் நிறுத்தப்பட்டுள்ளாரா? என வடமாகாணசபை அவைத் தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியிருக்கின்றாா். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் வே.பிரபாகரன் போதைப் பொருள் விற்பனையாளா்களுடன் நேரடியாக தொடா்பு பட்டிருந்தாா் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள கருத்திற்கு பதிலளிக்கும் முகமாக இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குழப்பத்தை ஏற்படுத்துவதற்குப் பழகிக்கொண்டுள்ளார். அதன்பிரகாரம், பிரபாகரன் போதைப்பொருள் விற்பனை செய்தவர் என்ற கருத்தைக் கூறி குளறுபடிகளை ஏற்படுத்தியுள்ளார்.இவர் பன்னாட்டு வர்த்தகம் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் என்பவற்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் ஈடுபட்டதாக சொல்லியிருக்கின்றார்.ஜனாதிபதிக்கு ஏற்கனவே பல பிரச்சினைகள் இருக்கின்றன. இந்நிலையில் அவர் 19ஆவது திருத்தச் சட்டத்தை இல்லாமல் செய்யப் போவதாக சொல்லியிருக்கின்றார். போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப் போவதாக சொல்லியிருக்கின்றார். இவை அனைத்திற்கும் எதிர்ப்புகள் உள்ளன. இந்த எதிர்ப்புகளில் இருந்து தப்புவதற்காக இவ்வாறு புலிகள் மீது தப்புக்களை காட்டி தாங்கள் ஹீரோவாக்கும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஒரு நாட்டின் தலைவர், பொறுப்பற்ற விதத்தில் ஒரு கூற்றை முன்வைப்பது, ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. ஒரு தவறான விடயம். எந்த அடிப்படையில் பன்னாடு என்கின்றார்.எந்தப் பன்னாட்டில் விடுதலைப் புலி உறுப்பினர் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்? நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்? ஒரு ஜனாதிபதி ஆதாரத்துடன் பேச வேண்டும். ஒரு ஆதாரமும் இல்லாமல், எழுந்தமானத்தில் இவ்வாறு சொல்வது தவறு. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில், அவர்களுக்கு நிதி எவ்வாறு சேர்ந்ததென்பது அனைவருக்கும் தெரியும். இந்த மண்ணில் முறைப்படியான நிர்வாகத்தை நடத்தி, வரி அறவீடுகளை முறைப்படியாக செய்து, முறையான விதத்தில் விடுதலைப் புலிகள் நிர்வாகம் செய்தார்கள்.புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு கொடுத்தார்கள். இது ஒரு மக்கள் போராட்டமாக இறுதி வரை தொடர்ந்தது. போதைப்பொருள் உட்பட புகைத்தல் மற்றும் மதுபான பழக்கமற்ற ஒரு இயக்கம் விடுதலைப் புலிகள் இயக்கம். எந்தவொரு நாட்டிலும், எந்தவொரு விடுதலை இயக்கங்களுக்கும் இல்லாத ஒரு கட்டுப்பாடு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இருந்தது.அவ்வாறான ஒரு இயக்கத்தை போதைப்பொருள் விற்பனை செய்தார்கள் என்பது பொறுப்பற்ற, அநாகரீகமான கருத்து. கண்டிக்கத்தக்கது. ஆதாரமற்றது. இவ்வாறான கருத்துக்களை ஒரு ஜனாதிபதி கூறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.