போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு 7 பேர் பலி!

breaking
சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சூடானில் கடந்த 30 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்த ஒமர் அல் பஷீருக்கு எதிராக மக்கள் போராட்டம் இடம்பெற்றது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் அவரை கைது செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. 3 ஆண்டுகளுக்குள் ஜனநாயக முறையில் புதிய ஆட்சியை முன்னெடுப்பதற்கு வழிவகை செய்யப்படும் என ராணுவம் அறிவித்தது. ஆனால் மக்களாட்சிக்கு ஆதரவாக போராட்டங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஆரம்பத்தில் சமாதானத்தை வலியுறுத்திய ராணுவம் பின்னர் போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க முனைந்தது. கடந்த மாதம் 3 ஆம் திகதி தலைநகர் கார்த்தோமில் போராட்டக்காரர்கள் மீது ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், நாட்டில் உடனடியாக மக்களாட்சியை ஏற்படுத்த வலியுறுத்தி கார்த்தோம் மற்றும் ஒம்டார்மன் நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டக்காரர்களை சுற்றி வளைத்த ராணுவத்தினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க முயற்சித்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்கள் மீது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் போராட்டக்காரர்களில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் சுமார் 200 பேர் படுகாயமடைந்தனர்.