பொலிஸார் பறிகொடுத்த கைத்துப்பாக்கி கிடைத்தது!

breaking
மட்டக்களப்பு, புதூர் பகுதியில் பொலிஸாரால் பறிகொடுக்கப்பட்ட கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று இடம்பெற்ற சம்பவமொன்றில் பொலிஸாரிடமிருந்து சிலரால் அபகரிக்கப்பட்ட குறித்த கைத்துப்பாக்கி, சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு- புதூர்,  திமிலைதீவுப் பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில்  பயணித்த இருவரை தடுத்து நிறுத்துவதற்கு போக்குவரத்து பொலிஸார் நேற்று  முயற்சித்துள்ளனர். எனினும், நிறுத்தாமல் சென்ற குறித்த இருவரும், எதிரே வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகினர். இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் குவிந்த இளைஞர்கள் சிலர் போக்குவரத்து பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளதாகவும்  பொலிஸார் தரப்பில் கூறப்படுகின்றது. இதன்போது போக்குவரத்து பொலிஸாரின் கைத்துப்பாக்கியினை ஒருவர் பறித்துக்கொண்டு ஓடியதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு புதூர் பகுதியில் இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். எனினும் துப்பாக்கி கிடைக்கப்பெறாத நிலையில், இன்றும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்தது. இதனிடையே, குறித்த கைத்துப்பாக்கி அப்பகுதியிலுள்ள கிணற்றில் வீசப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், கிணறு ஒன்றிலும் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போது பொலிஸாரின் குறித்த கைத்துப்பாக்கி நேற்று சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.