லெப். கேணல் சூட்டி நினைவுகளில்.!

breaking
எனது நண்பர் ஒருவருடன் லெப் கேணல் மகேந்தியண்ணையைப் பற்றிய நினைவுகளைப் பரிமாறிக் கொண்டிருந்தோம். மகேந்தி அண்ணையின் தனிச்சண்டைகள் பற்றியும் அவருடைய துணிச்சலான சம்பவங்களைப் பற்றியும் கதைத்துக் கொண்டிருந்த போது, மகேந்தி அண்ணையைப் போலத்தான் சூட்டியும் என்று சொன்ன நண்பர், அவர்களிருவரும் ஒன்றாக இருந்தபோது நடந்த சில சுவாருசியமான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ‘‘அது 1989 ம் ஆண்டு காலப்பகுதி, இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் காலகட்டம், வன்னிக் காடுகளில் போராளிகள் அணி அணியாகப் பிரிந்து தங்கியிருந்தனர். இந்திய இராணுவம் காட்டுக்குள் இராணுவ நடவடிக்கைகளுக்காக இறங்கினாலன்றி போராளிகள் வழமையான பம்பலும் பகிடியுமாகத்தான் இருப்பார்கள். பல யாழ்மாவட்டப் போராளிகளுக்குக் காடு புதிது, காட்டு மிருகங்களைப் பற்றிக் கேள்விப்பட்டாலும் அதைப்பற்றிய அனுபவமின்மையிருந்தது. வன்னிக் காடுபற்றித் தெரிந்த சிலர், யாழ்ப்பாணப் போராளிகளுக்கு காடு, மிருகங்கள் தொடர்பில் சில போலியான கதைகளைக்கூட பகிடிக்காக கட்டிவிடுவார்கள். இதனால் இவை தொடர்பாக ஏதாவது உண்மைக் கதைகள் சொன்னால் பகிடிக்குச் சொல்வதாக நினைத்து நம்பமாட்டார்கள்.” ‘‘ஒரு தடவை பாலமோட்டைக் காட்டுப்பகுதியில் ஒரு அணி தங்கியிருந்தது. அப்போது அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் யானைகள் வந்து நிற்பதாக போராளி ஒருவர் சொன்னார். அப்ப சூட்டி உட்பட எங்களுக்கும் யானை பார்க்கும் ஆசை வந்தது. எனவே நாங்கள் யானை நிற்கும் இடத்திற்குச் செல்ல முற்பட்டோம். வன்னியைச் சேர்ந்த போராளிகள் கவனம், யானை தூரத்தில் நிக்கிறமாதிரி இருக்கும் ஆனால் வேகமாக பக்கத்தில வந்திடும் என்று எச்சரித்தனர். ‘சும்மா கதைவிடாதைங்கோ’ என சொல்லிவிட்டுச் சென்றோம்.” ‘‘முகாமிற்குப் பக்கத்தில் இருந்த வெட்டையிற்தான் யானை நின்றது என்பதால் சூட்டி சாரத்துடனே வந்தார். யானைக்கூட்டத்தின் பார்வை எல்லைக்குள் சென்றபின், சூட்டி எங்களில் இருந்து முன்னுக்குச் சென்று, பம்பலாக சாரத்தைப் பிடித்து முன்னுக்கும் பின்னுக்குமாக ஆட்டி,யானையைப் பார்த்து, ‘வா வா‘ என சொல்லிக்கொண்டிருந்தார். சூட்டி எப்பவும் ஏதாவது வம்பு பண்ணிக்கொண்டிருப்பார். அப்படிச் செய்து கொண்டிருக்கும் போது யானைக்கு என்ன நடந்ததோ என்னவோ தெரியவில்லை. திடீரென ஒரு யானை எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. சூட்டி திரும்பி ஓடத் தொடங்க, நாங்களும் வேகமாக பின்னுக்கு ஓடத்தொடங்கினோம். ஓடிவந்த பாதையில் முகாமிற்கு தடிவெட்டிய மரங்களின் அடிக்கம்புகள் ஆங்காங்கு நின்றன. கட்டைகளில் தட்டுப்படாமல் ‘‘தலைதப்பினால் தம்பிரான புண்ணியம்” என்று நினைத்துக் கொண்டு ஓடிக்கொண்டிருந்தோம். சூட்டி எங்களிற்கு பின்னால கடைசியாத்தான் வந்துகொண்டிருந்தவர். ஓடிவரும் போது திரும்பிப் பார்க்கேக்கில ஓடிக்கொண்டு வந்த அவரின் சாரம் மரத்தின் அடிக்கம்பில் தடக்குப்பட, அப்படியே நிலைகுப்பற விழுந்து விட்டார். அவர் சுதாகரித்து எழும்பி ஓடுவதற்கு முன் யானை அவருக்குக் கிட்ட வந்துவிட்டது. வந்த யானை கால் ஒன்றைத் தூக்கி இவரின் மேல் மிதித்தது. நாங்கள் திகைத்துப் போய்ப்பார்த்தோம். ஆனால் யானையின் கால் இவரது கால் இடைவெளிக்குள்தான் மிதித்து நின்றது. சாரத்தில் மிதித்ததால் சூட்டி எழும்ப முடியாமல் திகைத்துப்போய் யானையின் காலுக்குள் கிடந்தார். பின்னர் யானை சூட்டியை தும்பிக்கையால் தூக்கி, தும்பிக்கைக்குள் வைத்து உறுட்டித் தேய்க்கத் தொடங்கியது.சிலவேளை தூக்கி எறிவதற்காகத்தான் அப்படிச் செய்ததோ தெரியவில்லை.” ‘‘சூட்டி ஒன்றும் செய்ய முடியாமல் தும்பிக்கைக்குள் இருந்து உறுட்டுப்பட்டு, தேய்பட்டுக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் ஒருபோராளி முகாமிற்கு ஒடிச் சென்று துப்பாக்கியை எடுத்துவந்து வானத்தை நோக்கிச் சுட, யானை சூட்டியைத் தூக்கி வீசாமல் அப்படியே போட்டு விட்டு ஓடிவிட்டது. நாங்கள் ஒடி சூட்டிக்குக்கிட்டச் செல்ல, சுதாகரித்து எழும்பி நின்றார். முகம் வீங்கியிருந்தது. யானை நிலத்தில் தேய்த்ததால் முகத்தில் இரத்தக்காயங்களும், உடம்பில் தேய்த்த அடையாளங்களும் இருந்தன. ஆனால் சூட்டி சிரித்துக் கொண்டிருந்தார். இதுதான் சூட்டியின் குணவியல்வு, எந்த கடினமான சந்தர்ப்பங்களிலும் பதட்டத்தைக் காணமுடியாது. நிதானமாகவும் துணிவாகவும் செயற்படுவது அவரது இயல்பு.” ‘‘பிறிதொரு சமயம் மணலாற்றுக் காட்டுப்பகுதியில் இந்திய இராணுவம் ‘செக்மெய்ற்’ எனப் பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கையை, தலைவரை இலக்கு வைத்து மேற்கொண்டது. இதனால் தலைவரை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது கேணல் சங்கர் அண்ணையுடன் ஒரு அணி, தலைவரை மாற்றுவதற்காகத் தீர்மானித்த இடத்திற்கான உணவுகளைக் களஞ்சியப்படுத்துவதற்காகச் சென்றது. அந்த அணியில் சூட்டியும் நானும் இடம்பெற்றிருந்தோம். சூட்டி காட்டிற்குள்ளால் பாதையை முறித்துக் கொண்டு முன்னுக்குச் சென்று கொண்டிருந்தார்.அப்போது இடையில் இருந்த கருங்குளவிக்கூடு தட்டுப்பட்டு குளவி கலையத்தொடங்கியது. சூட்டியையும் ஓடச்சொல்லிவிட்டு, நாங்கள் எல்லாரும் கலைஞ்சு ஒடிவிட்டோம். பின்னர் எல்லோரும் ஒன்றாகிய பின் பார்த்தால் சூட்டியைக் காணவில்லை. அவரைத் தேடி குளவிக்கூட்டடிக்குச் சென்றோம். அந்த இடத்திலேயே சூட்டி குப்பறக்கிடந்தார். சூட்டிக்கு கருங்குளவி குத்தத் தொடங்க, வேதனையில் அப்படியே விழுந்து கிடந்துவிட்டார். கருங்குளவிகள் தலையிலிருந்து கால் வரை உடலில் இருபத்துமூன்று இடங்களில் குத்திவிட்டு கலைந்து சென்று விட்டன. வேதனையில் துடித்தார். ஒரு கருங்குளவி முறையாக் குத்தினாலே தப்புவது கடினம் என்பார்கள். மருத்துவமனைக்கும் கொண்டு செல்ல முடியாது. முகாமிற்கு கொண்டு வந்து பழப்புளியைக்கரைத்து உடம்பு முழுவதும் ஊற்றிக்கொண்டிருந்தாம். ஒரு கிழமைவரை, சாகிறாக்கள் சேடம் இழுக்கிறதைப்போல இழுத்துக் கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தார். பிறகு குளவி குத்திய இருபத்துமூன்று இடங்களிலும் பொட்டளவிற்குக் காயமாகியது.அதன்பின்னரே குளவி குத்தின இடங்களில் இருந்து குளவியின் ஆணிகளை எடுக்கக்கூடியவாறு இருந்தது. அதுக்குப்பிறகுதான் முழுமையாகக் குணமடைந்தார். இந்தத்தடவை இரண்டாவது முறையாக சாவின்விளிம்புவரை சென்று திரும்பினார். பின்னர் ஒருதடவை மன்னாரில் அமைந்திருந்த எமது முகாம் ஒன்றிற்குச் சென்று கொண்டிருந்தோம். முகாமிலிருந்து கிட்டத்தட்ட மூன்று கிலோமீற்றர் தூரத்திற்கு முன் இந்திய இராணுவம் காடு முறித்துச் சென்ற தடையம் இருந்தது. பொறுப்பாளர் தடையத்தை பின்தொடர்ந்து எங்கு செல்கின்றது எனப் பார்க்குமாறு ஒரு போராளியிடம் கூறினார். ஆனால் சூட்டி நான் போறன் எனக்கூறி, தன்னுடன் ஐந்து பேரைக்கூட்டிக் கொண்டு தடையத்தைப் பின்தொடர்ந்து சென்றார். இராணுவம் தடையத்தை ஏற்படுத்திவிட்டு, தடையத்தின் இடையில், தடையம் சென்ற திசையை பார்த்து நிலையெடுத்திருந்தான். இவர்கள் தடையத்தைப் பின்தொடர்ந்து செல்ல, பதுங்கியிருந்த இராணுவம் தங்களைத் தாண்டிச் செல்லவிட்டு விட்டு இவர்கள் மீது பின்பக்கமாகத் தாக்குதலைத் தொடுத்தது. திரும்பி இராணுவத்தின் மீது தாக்குதலைத் தொடுத்தவாறு காட்டுக்குள் பிரிந்து ஓடிவிட்டனர். பிறகு காடுமாறி, அப்பகுதியில் இருந்த சனத்திட்ட வழிகேட்டு இரண்டு நாட்களின் பின் முகாமிற்கு வந்து சேர்ந்தார் சூட்டி. பின்னர் குளிப்பதற்காக உடுப்பு எடுக்க பாக்கைத் (Bag) திறந்து பார்த்தால் முதுகில் போட்டிருந்த உடுப்புபாக்கில் மூன்று ரவைகள் பட்டு உடுப்பு கந்தலாகக் கிழிந்திருந்தது. இந்த சம்பவத்திலும் மயிரிழையில் மூன்றாவது தடவையாக உயிர்தப்பியிருந்தார்.” மேலும் அவர் சூட்டி அண்ணையின் தனிப்பட்ட குணாதிசயங்களைப்பற்றிக் கூறும்போது ‘‘சூட்டி மூத்த உறுப்பினர் ஒருவருடைய நம்பிக்கைக்குரிய போராளியாகச் செயற்பட்டவர். சிறந்த நிர்வாகி, நேரம் பாராது கடுமையாக உழைக்கக்கூடிய ஒருவர். எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் பண்பாளர்” என்றார். சூட்டியண்ணையின் இந்தக் குணாதியங்களை நான் புரிந்து கொண்டது ஆ.க.வே சண்ணடையின்போது. ‘‘1991 ம் ஆண்டு, ஆ.க.வே சண்டைக்காக அணிகள் தயாராகிக் கொண்டிருந்தன. கனரக அணியினரான எங்களுக்கு வெற்றிலைக்கேணிக் கடற்கரைப்குதியில் கடற்படையின் தரையிறக்கத்தைத் தடுப்பதற்கான பணி தரப்பட்டது. அந்தப்பகுதிக்குச் சூட்டியண்ணைதான் பொறுப்பாளர். வெற்றிலைக்கேணி கடற்கரைமணலில் நிலையமைத்துக் கொண்டருந்தபோது அருகில் நின்ற போராளி சூட்டியண்ணை வருகின்றார் எனச் சொன்னார். தலையை நிமிர்த்தி பார்த்தபோது சராசரி உயரம், சிரித்தமுகம், தலையில் பின்பக்கமாக திருப்பி விடப்பட்ட தொப்பியுடன் வந்தார் சூட்டியண்ணை. அவரைப்பார்த்தவுடன் உடனே நினைவிற்கு வந்தது லெப். கேணல் மகேந்தி அண்ணை தான். கிட்டத்தட்ட ஒத்த முகவமைப்பைக் கொண்டவர்கள். நாங்கள் கனரக ஆயுதங்களிற்கான பயிற்சி எடுத்த முகாமில் தான் 23. MM கனரகப் பீரங்கிக்கான பயிற்சியை மகேந்தியண்ணை எடுத்தார். அப்போது அவருடன் எனக்குச் சிநேகிதம் ஏற்பட்டது. எனவே சூட்டியண்ணையுடன் முதல் சந்திப்பிலேயே இலகுவாகவே அணுகக்கூடியவாறு இருந்தது. ஆனையிறவுத்தளத்தை முற்றுகையிட்டுத் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதும் தரையிறக்கத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தன அணிகள். சூலை 14 ம் திகதி நீண்டு விரிந்த கடற்பரப்பில் அணிவகுந்து நின்றன கடற்படைக்கலங்கள். சூட்டி அண்ணையும் தனது பகுதியில் உள்ள அணிகளை தயார்ப்படுத்திக் காத்திருந்தார். விமானத்திலிருந்து வந்த குண்டுகள் கடற்கரைப்பகுதியில் கடற்படைத்தரையிறக்கத்திற்கான முன்னேற்பாட்டைச் செய்து கொண்டிருந்தன.பின்னேரம் கடற்படைக்கலங்கள் தரையை நோக்கி நகரத்தொடங்கின. கனரக அணிகளும் முடிந்தளவிற்குத் தாக்குதலைத் தொடுத்து இழப்புக்களை ஏற்படுத்தினாலும் இராணுவம் தரையிறங்கி விட்டது, றோட்டுக் கரையால் இராணுவம் தரையிறங்கிய அந்தப்பகுதியை நோக்கி சூட்டி அண்ணை ஓடிச் செல்வது தெரிந்தது. நாங்கள் கடற்கலன்கள் மீதான தாக்குதல்களை தொடர்ந்து கொண்டிருந்தோம். இராணுவம் தரையிறங்கிய பகுதியில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருந்தது. வோக்கியில் சூட்டியணையைத் தொடர்புகொள்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் எங்களை அவ்விடத்திலிருந்து பின்வாங்குமாறு கட்டளை கிடைக்க பின்வாங்குகின்றோம். மறுநாள் ரவி அண்ணை அழுது கொண்டிருந்தார். சூட்டியண்ணை வீரச்சாவடைந்துவிட்டார் என்பது புலப்பட்டது. எத்தனையோ சந்தர்ப்பங்களில் எல்லாம் உயிர் தப்பிய சூட்டியண்ணை ஆ.க.வெ சமரில் வெற்றிலைக்கேணி கடற்கரையில் தரையிறங்கிய இராணுவத்திற்கெதிரான சண்டையில் வீரச்சாவடைந்தார். அவரது குடும்பத்தில் மூன்று பேர் போராளிகளாக இருந்தனர். லெப்கேணல் சூட்டி, அவரது தம்பி லெப் கேணல் மகேந்தி. இருவரும் வீரச்சாவடைந்து விட்டனர். அவரது இன்னுமொரு சகோதரன் ரவி அண்ணைக்கு முள்ளிவாய்க்காலின் என்ன நடந்தது என்று இன்றுவரை தெரியாது. நினைவுப்பகிர்வு:- வாணன் நினைவழியாத் தடங்கள் 08 தொகுப்பு