இந்துமுன்னனி பிரமுகருக்கு அரிவாள் வெட்டால் ஆலங்குடியில் பதற்றம் .!

breaking
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் தமிழ் பிளக்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருபவர்  முருகானந்தம். சில மாதங்களுக்கு முன்பு இந்து முன்னனியின் ஆலங்குடி நகரத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தந்தை கணேசன்  ஆகியோர் நேற்று இரவு 10.30 மணியளவில் அவர்களது அலுவலகத்தில் பிளக்ஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அங்கு வந்த ஜகுபருல்லா மற்றும் அவரது நண்பர்கள் முருகானந்தம், அவரது தந்தை கணேசன் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஒடியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச் சம்பவத்தை கேள்விப்பட்டு முருகானந்தம் உறவினர்கள் ஆலங்குடியில் சில வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை அடித்து நொறுக்கியதால் பதற்றம் ஏற்பட்டது இதனையடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.

இன்று காலை சம்பவ இடத்திற்கு  வந்த திருச்சி மண்டல டிஐஜி பாலகிருஷ்ணன், புதுக்கோட்டை எஸ்.பி., செல்வராஜ்  ஆகியோர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டிருந்த நிலையில் ஜபருல்லா தரப்பை சேர்ந்த ஒரு இளைஞர் புதுக்கோட்டைக்கு பேருந்தில் செல்வதை அறிந்த முருகானந்தம் உறவினர்களான பல இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் விரட்டிச் சென்று வம்பனில் அந்த இளைஞரை இறக்கி உடைத்து உதைத்து துடிதுடிக்க போட்டுவிட்டு சென்றுவிட்டனர். இதனால் அமைதி நிலை திருப்பிய ஆலங்கடியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. படுகாயத்துடன் துடித்துக் கொண்டிந்த இளைஞரை ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இந்துமுன்னனி முருகானந்தம் தாக்கப்பட்ட தகவல் அறிந்து இந்துமுன்னனி பிரமுகர்கள் ஆலங்குடி வரத் தொடங்கினார்கள். தகவல் அறிந்த அவர்களை வரவிடாமல் வழியிலேயே தடுத்து போலிசார் கைது செய்துள்ளனர். மேலும் பதற்றத்தை குறைக்கவும், மேலும் இது  போன்ற சம்பவம் நடக்காமல் இருக்கவும் இரு தரப்பினரையும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.