ரணில் மோதகமெனில் மகிந்த கொழுக்கட்டை: ஐங்கரநேசன் கருத்து

breaking
  தமிழர்களது வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில்தான் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் அதிகாரப்பரவலாக்கல் மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார் என்று வடக்கின் முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் தெரிவித்தார். அத்தோடு, தமிழர்களைப் பொறுத்தவரை மஹிந்தவும் ரணிலும் ஒன்றுதான் என்றும் அவர் குறிப்பிட்டார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழர்கள் மீது இனத்துவேசத்தைக் காட்டுவதில் ஐக்கிய தேசியக் கட்சி, சுதந்திரக் கட்சி என அனைத்து கட்சிகளுமே ஒரே மாதிரிதான் செயற்படுகின்றன. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவு தேவை என்றும் அதனாலேயே தாம் வெற்றியடைய முடியுமென்ற நம்பிக்கை பிரதமரிடம் உள்ளது. அதனாலேயே இரண்டு வருடத்தில் அதிகாரப்பரவலாக்கல் மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருக்கிறார். நல்லாட்சி அரசியலில் எதனையும் செய்யாத அவர் மீண்டும் மீண்டும் பொய் கூறி மக்களை ஏமாற்றுகிறார்” என மேலும் தெரிவித்தார்.