வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர் ஓயாத அலைகள் - 01

breaking
யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது.
ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், இதன் பெயரிற்கேற்ப பிற்பட்ட காலத்தில் ஓயாத அலைகள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வெற்றிகர வலிந்த தாக்குதல்களிற்கான முதற்படியாக அமைந்து ஓயாத அலைகள் – 01 எனக் குறித்துக் காட்டவேண்டிய தாக்குதலுமானது.
முதற்றரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டதும் முழுமையான கடல்வழி ஆதரவைக் கொண்டதும் தன்னகத்தே பலமான மோட்டார், ஆட்டிலறிச் சூட்டாதரவைக் கொண்டதுமான முல்லைப் படைத்தளம் விடுதலைப் புலிகளின் 30 மணிநேரத் தாக்குதலின் பின் அவர்களின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இத்தாக்குதல் விடுதலைப் புலிகளின் மற்றுமொரு வளர்ச்சியைக் காட்டும் தாக்குதலாகவும் அமைந்தது.
சிங்களக் கடற்படையின் கடல்வழி ஆதரவைத் தடுக்கும் வலிமையை விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பெற்றுவிட்டார்கள் என்ற செய்தியை வெளிக்காட்டும் வகையில் முல்லைத்தளத்தினுள் கடல் வழித் தரையிறக்கம் மேற்கொள்ளப்படா வண்ணம் தடுத்த கடற்புலிகள் முல்லைத் தளத்திற்கு தெற்கே மூன்று கிலோமீற்றர் தொலைவில் அளம்பில் பகுதியில் வான்வழியால் தரையிறக்கப்பட்ட படைகள் கடல்வழியால் வலுவூட்டப்படுவதையும் தடுத்து நின்றனர். இவ்வாறு சிங்களக் கடற்படைக்குச் சவால்விடும் வகையில் கடலில் புலிகள் பலம் பெற்றமையையும் இத்தாக்குதலால் உலகம் கண்டுகொண்டது. முல்லைப் படைத்தளம்:- வன்னிப்பிரதேசத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருக்கும் கடற்கரைப் பட்டினமான முல்லைத்தீவுப் பட்டினத்தை வன்கவர்ந்து அதில் அமைக்கப்பட்டிருந்ததுதான் முல்லைப் படைத்தளம். ஆரம்பத்தில் கடல்வழிக் கடத்தலைத் தடுப்பதற்காக முல்லைப்பட்டினத்தின் ஒதுக்குப்புறமாக சிறு கூடாரமொன்றில் பத்திற்கும் குறைவான சிங்களப் படையினர் தங்கியிருந்தனர். காலப்போக்கில் அத்தங்ககம்; விரிவாக்கப்பட்டு வந்தது. 1990 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அத்தங்ககத்தைத் தமது முற்றுகையின்கீழ் கொண்டு வந்ததையடுத்து கடற்காற்று – Operation SEA BREEZE – எனும் படை நடவடிக்கை மூலம் தமது படையினரை முற்றுகையில் இருந்து மீட்ட சிங்களப் படைகள் அங்கு பலமான படைத்தளத்தை அமைத்துக் கொண்டன. அத்துடன் 1992 ஆம் ஆண்டு சத்பல – Operation SATHBALA – என்ற பெயரில்; மணலாற்றை நோக்கிய படை நகர்வை மேற்கொண்டு அளம்பில் வரையான பிரதேசத்தை வன்கவர்ந்த சிங்களப் படைகள் அதற்கு அப்பால் நகர முடியாது திணறியதுடன், முன்னகர்ந்த படைகளும் சிறிது காலத்தில் முல்லைத் தளத்திற்கே பின்னகர்ந்தன. இவ்வாறு தொடர்ந்து விரிவாக்கப்பட்டு வந்த முல்லைப் படைத்தளம் ஓயாத அலைகள் – 01 தாக்குதல் நடைபெற்றபோது ஒரு கூட்டுப்படைத்தளமாக விளங்கியது. ஓயாத அலைகள் – 01 தாக்குதல் நடைபெற்றபோது 25 ஆவது பிரிகேட் கூட்டுப்படைத்தளமாக விளங்கிய முல்லைப் படைத்தளம் 1,407 படையினரைக் கொண்டிருந்தது. வெளிச்சுற்று, உட்சுற்று என இரு காப்புநிலை வரிசைகளைக் கொண்டிருந்த இத்தளம் 2,900 மீ. நீளமும் 1,500 மீ. அகலமும் கொண்டிருந்தது. இதன் வெளிச்சுற்றுக் காப்பு வரிசை 8,500 மீற்றர் சுற்றளவைக் கொண்டதாக இருந்தது. முல்லைப்பட்டினத்தை மையமாகக் கொண்டு படைத்தளத்தின் உட்சுற்றுக் காப்பு வரிசை அமைக்கப்பட்டு அதனுள் ஆட்டிலறி, மோட்டார் ஏவுதளம், பிரிகேட் தலைமையகம், பட்டாலியன் தலைமையகங்கள், தொலைத்தொடர்புக் கோபுரம், உலங்கூர்தி இறங்குதளம் போன்ற தளத்தின் முதன்மை அமைப்புக்கள் காணப்பட்டன. வெளிச்சுற்றுக் காப்பு வரிசையானது கிழக்கில் இந்து சமுத்திரத்தையும் தெற்கில் இறால் குளம் மற்றும் பரந்த வெளிகளையும் மேற்கில் நந்திக் கடல் நீரேரியையும் வடக்கில் வெட்டு வாய்க்கால் தொடுவாயையும் எல்லைகளாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் தரையமைப்பானது காப்பு வரிசையமைப்பிற்கு மிகவும் சாதகமானதாக விளங்கியது. இந்தக் காப்பு வரிசையிலே உயர்ந்த மண்ணணை அமைக்கப்பட்டு அதிலே அண்ணளவாக 40 மீற்றரிற்கு ஒரு காப்பரண், தேவைப்படும் இடங்களில் உயரமாக அமைக்கப்பட்ட கண்காணிப்புக் கோபுரங்கள் என இடையறாத கண்காணிப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், தளத்தின் உட்புறத்தை கண்காணிக்க முடியாதவாறு மண்ணணையின் மேல் மறைப்பு வேலி அமைக்கப்பட்டிருந்தது. இந்த மண்ணணையின் வெளிப்புறத்தே பல நிரைகளில் அமைக்கப்பட்டிருந்த தடையமைப்புகள், கண்ணி வயல்கள், இரவுக் கண்காணிப்பு ஏற்பாடாக ஒலி அவதானிப்பு நிலைகள் என உயர்காப்பு ஏற்பாடுகளை இத்தளம் கொண்டிருந்தது. வேவு:- இத்தளம் விடுதலைப் புலிகளின் பொதுவான வேவு நடவடிக்கைக்கு உட்பட்டு இருந்தது ஆயினும் விடுதலைப் புலிகளின் இயங்குதளம் வன்னிக்கு நகர்ந்தபின் தேசியத் தலைவர் அவர்கள் இத்தளத்தைத் தாக்குவதற்கான சிறப்பு வேவு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பணித்தமைக்கு இணங்கச் சிறப்புத் தளபதி ஒருவரின் ஒருங்கிணைப்பின்கீழ் முன்னர் பொதுவான வேவில் ஈடுபட்ட போராளிகளையும் இணைத்துக் கொண்டு முனைப்பான வேவு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. கடல் வழியாலும் தரைவழியாலும் மிகவும் விரிவான வேவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மிகுந்த இடர்களின் மத்தியில் வேவு வீரர்கள் இரவைப் பகலாக்கி முல்லைப் படைத்தளத்தின் அமைப்பை அறிந்தார்கள். தாக்குதல் திட்டம்:- ஓயாத அலைகள் – 01 தாக்குதல் திட்டமானது அனைத்துச் செயற்பாடுகளும் நடைமுறையில் ஒத்திகை பார்க்கப்பட்டு மிகவும் துல்லியமாகத் தீட்டப்பட்டது. எடுத்துக்காட்டாக எதிரித்தளத்தின் வெளிச்சுற்றுக் காப்பு வரிசையின் கொலை வலயத்தினுள் அணிகள் நகர்த்தப்பட்டே நகர்விற்கான நேரங்கள் பெறப்பட்டு நேரத்திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதல் திட்டமானது பின்வரும் படிமுறைகளைக் கொண்டிருந்தது. – எதிரியின் வெளிச்சுற்றுக் காப்புவரிசையில் ஊடுருவல் பாதைகளை உருவாக்குதல். – அப்பாதையினூடாக ஊடுருவும் அணிகள் வெளிச்சுற்றுக் காப்பு வரிசையிலுள்ள காப்பரண்களைக் கைப்பற்றுதல். – ஊடுருவல் பாதைகள் மற்றும் கைப்பற்றப்பட்ட காப்பு வரிசையிலுள்ள சாதகமான பாதைகளால் உள்நுழையும் அணிகள் பிரதேசத் தேடியழிப்பை மேற்கொண்டு வெளிச்சுற்றுக்காப்பு வரிசைக்கும் தளத்தின் மையப் பகுதிக்கும் இடையேயான பிரதேசத்தைக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வருதல். – தாக்குதல் ஆரம்பித்த உடனேயே தளத்தின் மையப்பகுதி நோக்கி நகரும் அணிகள் தளத்தின் மையப்பகுதியைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருதல். – கடலூடாகவும் கடற்கரையில் அதற்குச் சமாந்தரமாகவும் ஊடுருவும் அணிகள் கடற்கரையைக் கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்து தளத்திற்கான கடல்வழி ஆதரவைத் துண்டித்தல். இதனைத் தவிரப் பின்வரும் பணிகளும் திட்டமிடப்பட்டன. – தளத்திற்கு மணலாற்றுப் பிரதேசத்தி லிருந்து தரைவழி ஆதரவு வழங்கப்படுதலைத் தடுத்தல். – தளத்திலிருந்து மணலாற்றுப் பிரதேசத்தை நோக்கிப் படையினர் பின்னகர் வதைத் தடுத்தல். – தளத்தை அண்டிய பிரதேசங்களில் தரையிறக்கம் மேற்கொள்ளப்பட்டுத் தளம் வலுவட்டப்படுவதைத் தடுத்தல். ஒட்டுமொத்தத்தில் முழுமையான வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக Ø துல்லியமானதும் விரிவானதுமான வேவு நடவடிக்கை. Ø விரிவானதும் நுணுக்கமானதுமான தாக்குதல் திட்டம். Ø துணிவுமிக்கதும் புதுமையானதுமான அரை மரபுவழி (Semi-conventional) தாக்குதல் உத்திகள். Ø விரிவான பின்னணி ஏற்பாடுகள் Ø துல்லியமான தகவல்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட விரிவான தொடர் ஒத்திகைப் பயிற்சிகள். Ø இரகசியக் காப்பு. Ø ஏமாற்று நடவடிக்கைகள். Ø எதிரி எதிர்பார்க்காத வகையிலான மறைமுகச் சூட்டுப் படைக்கலங்களின் வினைத் திறனான பயன்பாடு. Ø போதியளவான ஆளணி, படைக்கல ஒதுக்கீடு. என்பவற்றுடன் ஓயாத அலைகள் – 01 தாக்குதல் திட்டமிடப்பட்டது. தாக்குதல்:- திட்டத்திற்கமைய தமது குறியிலக்குப் பிரதேசங்களினுள் ஊடுருவிய தாக்குதல் அணிகள் 18 ஆம் நாளன்று காலையில் தளத்தின் பெரும்பகுதியைத் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தன. குறிப்பாகக் கடற்கரை முழுமையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டது. படையினர் 6 ஆவது விஜயபாகு படையணியின் தலைமையகம் அமைந்திருந்த பகுதிக்குள் முடக்கப்பட்டனர். இவ்வாறு முடக்கப்பட்ட படையினர் தமக்கு அண்மையிலுள்ள கடற்கரையைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான தாக்குதல்களை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டன. கடற்புலிகளின் பெரும் எதிர்ச்சமர்:- இதேசமயம் சிறிலங்காக் கடற்படை தனது உச்சத்திறனைப் பயன்படுத்தி முல்லைப் படைத்தளத்தின் கடற்கரையைச் சென்றடைய மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் கடற் புலிகளால் முறியடிக்கப்பட்டன. 15 மணித்தியாலங்களாகச் சிங்களக் கடற்படையின் உச்சப் பலத்தையும் சிங்கள வான்படையின் வான்கலங்களையும் எதிர்கொண்ட வண்ணம் கடற்புலிகள் வீரத்துடன் எதிர்ச்சமர் புரிந்தனர். வலுவூட்டலிற்கான தரையிறக்கம்:- முல்லைத் தளத்தின் கடற்கரையில் ஒரு கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப் போகவே முல்லைத் தளத்திற்குத் தெற்கே 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சிலாவத்தைப் பிரதேசத்தில் 18 ஆம் நாளன்று மாலையில் ஒரு வான்வழித் தரையிறக்கத்தைச் சிங்களப் படைகள் மேற்கொண்டன. திரிவிட பகர – என்று பெயர் சூட்டி மேற்கொள்ளப்பட்ட இந்நடவடிக்கையில் கிபிர் மற்றும் புக்காரா குண்டுவீச்சு வானூர்திகள், MI-24 தாக்குதல் உலங்கூர்திகளின் தாக்குதல் ஆதரவுடன் முதற்கட்டமாக MI-17 உலங்கூர்திகளில் கொண்டுவரப்பட்ட கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டனர். இவ்வாறு தரையிறக்கப்பட்ட கொமாண்டோக்களைக் கொண்டு பாதுகாப்பான தரையிறக்க வலயம் ஒன்றை உருவாக்கியபின் கடல்வழித் தரையிறக்கத்தை மேற்கொள்வதே படையினர் நோக்கமாக இருந்தது. 18 ஆம் நாளன்று அவர்களின் அந்த நோக்கம் ஈடேறக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அத்துடன் இவ்வாறான தரையிறக்கம் ஒன்றை எதிர்பார்த்திருந்த விடுதலைப் புலிகளின் படையணிகள் தரையிறங்கிய கொமாண்டோக்களை 18 ஆம் நாள் இரவே வளைத்துக்கொண்டன. தளம் முழுமையான கட்டுப்பாட்டில் வந்தது:- இதேசமயம் 18 ஆம் நாள் மாலையில் முல்லைத் தளத்தினுள் முடங்கிப் போயிருந்த படையினர் மீது செறிவான நேரடி வன்கலச் சூட்டாதரவுடன் நெருங்கித் தாக்கிய விடுதலைப் புலிகளால் படையினர் அனைவரும் அழிக்கப்பட்டு அன்றிரவே படைத்தளம் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. ரணவிரு மூழ்கடிக்கப்பட்டது:- 19 ஆம் நாளன்று சிலாவத்தையில் தரையிறங்கிய படையினர் கடல்வழியால் வலுவூட்டப் படுவதற்குக் கடற்புலிகள் அனுமதிக்கவில்லை. அன்று மாலை 4.30 மணியளவில் தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த சங்காய் 3 வகைப் பீரங்கிப் படகான ரணவிரு கடற்கரும்புலிகளின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்டது. அன்றும் சிங்களப் படைகளிற்கு வான்வழித் தரையிறக்கமே சாத்தியமானது. அதேசமயம் தரையிறங்கிய படையினர் மீதான விடுதலைப் புலிகளின் நெருங்கித் தாக்குதல்களும் எறிகணைத் தாக்குதல்களும் ஆரம்பமாகின. MI-24 சேதமாக்கப்பட்டது:- 20 ஆம் நாளன்றும் கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமற்றுப்போக சிங்களப் படைகளின் ஒரேயொரு நம்பிக்கையாக இருந்த வான்வழித் தரையிறக்கத்திற்கும் ஆபத்து ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் எறிகணை வடிவில் வந்த அந்த ஆபத்து தரையிறக்க வந்த ஒரு MI-17 உலங்கூர்தியைச் சேதமாக்க அன்று வான்வழித் தரையிறக்கமும் சாத்தியமற்றுப் போனது. புலிகளின் இறுக்கமான முற்றுகைக்குள் தரையிறக்கப்படைகள்:- 21 ஆம் நாளன்று பலத்த முயற்சியின் பின் ஒரு கடல்வழித் தரையிறக்கத்தைச் சிங்களக் கடற்படை மேற்கொண்டது. இவ்வாறு படையினர் தரையிறக்கப்பட்டு வலுவூட்டல் மேற்கொள்ளப்பட்டபோதும் அந்தப் படையினரால் புலிகளின் முற்றுகையை உடைத்துக்கொண்டு நகரமுடியவில்லை. தரையிறக்க முயற்சிகள் பயனற்றுப் போயின:- 22 ஆம் நாளன்றும் தரையிறக்க முயற்சிகள் சாத்தியமாகவில்லையாயினும் சிங்களப் படைகள் தமது தரையிறக்க முயற்சிகளைத் தொடர்ந்தன. 23 ஆம் நாளன்று தரையிறக்க முயற்சியில் ஈடுபட்டிருந்த தரையிறங்கு கலமொன்று புலிகளின் எறிகணையில் சேதமடைந்தது. அத்துடன் கடற்கரும்புலிகளின் படகொன்று நெருங்கிச் சென்று மோத முன்னர் வெடித்ததால் மற்றொரு தரையிறங்கு கலம் சேதங்களுடன் தப்பித்துக் கொண்டது. இதனால் அன்றும் தரையிறக்கம் சாத்தியமாகவில்லை. மீட்கவந்த படைகள் பெரும் அவலத்தின் மத்தியில் மீட்டெடுக்கப்பட்டன:- 25 ஆம் நாளன்று கடல்வழித் தரையிறக்கம் சாத்தியமான போதும் புலிகளின் இறுக்கமான முற்றுகையை உடைத்துத் தரையிறங்கிய படைகளால் ஒரு அங்குலமேனும் முன்னகர முடியவில்லை. அத்துடன் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் தரையிறங்கிய படைகள் இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் 26 ஆம் நாளன்று தரையிறங்கிய படைகளை மீட்டுச் செல்லவந்த தரையிறங்கு கலம் புலிகளின் எறிகணைத் தாக்குதலால் சேதங்களுடன் மயிரிழையில் தப்பித்துக் கொண்டது. இந்நிலையில் தரையிறங்கு கலம் மூலம் மிகுந்த இடர்களின் மத்தியில் தரையிறங்கிய படைகள் மீட்கப்பட்டன. தரையிறங்கிய படைகளைக் களமுனையில் வழிநடாத்திய லெப்.கேணல். பஸ்லி லாபிர் இந்நடவடிக்கையில் கொல்லப்பட்டார். கேணல் லோரன்ஸ் பெர்னாண்டோ காயமடைந்தார். தரையிறங்கிய படையினரில் 75 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் மீட்பின்போது தப்பித்து ஓடிய படையினர் கடலில் எறிந்த 100 இற்கும் அதிகமான சுடுகலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டன.   1,200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர்:- தரையிறக்கப்பட்ட படைகள் உட்பட 1,200 இற்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். இரண்டு 122 மி.மீ ஆட்டிலறிப் பீரங்கிகள் உட்பட பெருந்தொகையான படைக்கலங்கள், அவற்றிற்கான வெடிபொருட்கள் என்பன கைப்பற்றப்பட்டன. இவை அனைத்திற்கும் மேலாகத் தமிழர் தம் பாரம்பரியப் பட்டினமாம் முல்லைப்பட்டினம் மீட்டெடுக்கப்பட்டது. இந்த வெற்றிக்காக ஏழு கடற்கரும்புலிகள் உட்பட 314 மாவீரர்கள் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்து மாவீர்களானார்கள். அலைகள் ஓயாது ஓயாத அலைகள் – 01 நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டமையானது புலிகளின் புதிய பரிணாமத்தைப் பறைசாற்றியது. இந்த வெற்றியினால் புலிகளிற்குச் சாதகமான பல விளைவுகள் ஏற்பட்டன. யாழ். குடாவைச் சிங்களப் படைகள் வன்கவர்ந்தபோது வன்னிக்கு இடம்பெயர்ந்து அல்லற்பட்டு சோர்வுற்றிருந்த மக்கள் இந்த வெற்றியினால் புத்துணர்ச்சி பெற்றனர். புலிகள் பலமிழந்து விட்டார்கள் என்ற மாயை தகர்த்தெறியப்பட்டது. இவ்வாறு ஆரம்பித்த ஓயாத அலைகள் பின்னர் 02, 03 என ஓங்கியடித்துத் தமிழர்களினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் பலத்தைப் பகைவனிற்கும் அனைத்துலகிற்கும் வெளிக்காட்டியது கடந்த கால வரலாறு. நமது மண் விடியும் வரை அலைகள் ஓயாது. நன்றி: தமிழ்நாதம் (மூலம்: வெள்ளிநாதம்)