ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சிறிலங்கா பயணம்!

breaking
அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் ஒன்பது நாள் பயணத்தை மேற்கொண்டு நாளை சிறிலங்காவுக்கு வரவுள்ளார். அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காகவே அவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் ஜூலை 18ஆம் நாள் தொடக்கம் 26ஆம் நாள் வரை சிறிலங்காவில் தங்கியிருப்பார். கொழும்பிலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டு, மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார். அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளையும், நீதித்துறை, ஊடகத்துறை, சிவில் சமூக குழுக்களையும், மனித உரிமை ஆணைக்குழுவையும் சந்தித்து பேசவுள்ளார். இவர் தனது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.