அரச நியமனத்தை ஏற்காதோருக்கு 7 வருடங்கள் தடை-சுரேன் ராகவன்!

breaking
அரச உத்தியோகத்துக்கு நியமனம் பெற்ற எவரும், அந்த நியமனத்தைப் பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில், 7 வருடங்களுக்கு வேறோர் அரச உத்தியோகத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதளவுக்கு நடவடிக்கை  எடுக்கப்படுமென, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் எச்சரிக்கை விடுத்தார். வடமாகாண ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 77 அரச உத்தியோகத்தர்களுக்கான நிரந்தர நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு, இன்று (18) முற்பகல் 11 மணியளவில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் 9 பேருக்கும் கலாசார உத்தியோகத்தர்கள் மூவருக்கும், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 65 பேருக்குமான நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்நியமனங்களை வழங்கி உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு தொடர்ந்துரைத்த ஆளுநர், அரச நியமனங்களைப் பெற்றுக்கொள்ளும் அனைவரும், தமது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் எனவும் நியமனம் வழங்கிய அடுத்த நாள் இடமாற்றம் கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் கூறினார். “மக்களுக்கு விரோதமான பணி என்னவென்றால், நியமனம் வழங்கும் இடத்துக்குச் செல்லாமல் இருப்பதாகும். குறித்த நியமனத்தை எடுத்தவர், சுகயீனம் காரணமாக அல்லது வேறு ஒரு காரணத்துக்காக வராமல் இருக்கின்றாரென, சுமார் ஒரு மாதகாலம் நாங்கள் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்.கடிதம் அனுப்பி ஒன்றரை மாதகாலம் போனதன் பின்னரே எமக்குத் தெரியவரும், குறித்த நபர் அந்த நியமனத்தை பெற்றுக்கொள்ளவில்லை என்று. “அந்த ஒன்றரை மாதகாலம், உங்களுடைய நேர்முகப் பரீட்சையைச் செய்து அதனைப் பரீட்சித்து, உத்தியோகஸ்தர்கள் எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டு எடுத்த அந்தத் தீர்மானத்தை, நீங்கள் உதாசீனம் செய்யக்கூடாது. நியமனத்தை ஏற்று போகாமல் நிற்கும்போதுகூட, உரிய முறையில் தெரியப்படுத்துவது இல்லை. நாங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டிய நிலை உள்ளது. “இதனால், சேவை செய்யவேண்டிய மக்களுக்கான சேவையை வழங்க முடியாதிருக்கிறது. இந்த நிலையிலேயே,  வடமாகாணத்தில் நான் கட்டாயமான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளேன். அரச உத்தியோகத்துக்கு விண்ணப்பம் செய்து தேர்வுபெற்று நியமனம் பெற்ற யாரும், ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களுக்காக அந்த நியமனத்தைப் பெற்றுக்கொள்ளாத சந்தர்ப்பத்தில், குறித்த நபர், 7 வருடங்களுக்கு வேறோர் அரச உத்தியோகத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதளவு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அவருடைய பெயர், விவரங்கள், கறுப்புப் பட்டியலில் பதியப்படும்” எனவும், ஆளுநர் எச்சரிக்கை விடுத்தார்.