துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர் ஆவா குழு நபரே .!

breaking
மானிப்பாய் – இணுவில் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்  கொடிகாமத்தைச் சேர்ந்தவரென விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வட தமிழீழம் , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் சென்ற இளைஞனின் உறவினர் ஒருவரே சடலத்தை அடையாளம் காண்பித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அதற்கமைய கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். தென்மராட்சியிலிருந்து 3 மோட்டார் சைக்கிள்களில் 6 இளைஞர்கள் நேற்றிரவு புறப்பட்டனர் என்றும் இளைஞனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞனின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்துவிட்ட நிலையில், ஒரே பிள்ளையான இவர் தாயாருடனே வாழ்ந்து வந்தார் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மானிப்பாய் – இணுவில் வீதியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது சிங்கள பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருந்தார். குறித்த நபர் மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.