பௌத்த கொள்கையை கடைப்பிடிருந்தால் ஆயுதம் ஏந்த வேண்டி ஏற்பட்டிருக்காது

breaking
  ஶ்ரீலங்காவில் பௌத்த கொள்கை முழுமையாக அமுல்படுத்தப்பட்டிருந்தால், தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்த வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். மேலும், இன்று ஜனநாயக வேடம் போடும் அனைவரும் குற்றவாளிகளே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் தெரிவிக்கையில், “இந்த நாட்டில் கௌதம புத்தரின் பெயரைச் சொல்லி அப்போது ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜேயவர்தன உண்மையான பௌத்தராக பௌத்த மதக் கொள்கைகளை அமுல்படுத்தியிருப்பாராக இருந்தால், அன்று தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியிருக்க மாட்டார்கள். கௌதமராக அவரது பெயரைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், வந்ததன் பின்னர் கசாப்புக் கடைக்காரர்கள் போல நடந்துகொண்டதன் விளைவாகவே தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதனால் ஏற்பட்ட போர் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கள், துன்பங்கள் அனைத்திற்கும் இந்த நாட்டின் ஆட்சியாளர்களே முதல் காரணம். இவ்வாறு தற்போதைய ஆட்சியாளர்கள் நடந்து விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்கின்றோம். இன்று ஜனநாயக முகமூடி போட்டவர்கள் எல்லோரும் அதற்குப் பின்னால் கொலை காரர்களாகவே இருக்கின்றார்கள். இந்த நிலையில் தாங்கள் எல்லோரும் கௌதம புத்தர் என்று நினைத்துக்கொண்டு எம்மை கொள்ளைக் காரர்கள் என்றால் அதில் ஞாயமில்லை” என்று அவர் தெரிவித்தார்.