ஒருவர் கத்தியால் வெட்ட , இன்னொருவர் செல்போனை பிடுங்க.... நெஞ்சை பதைபதைக்கும் காட்சிகள்.!

breaking
பைக்கில் நின்று கொண்டிருந்த ஸ்விகி ஊழியரை அசால்ட்டாக கத்தியால் தலையில் வெட்டிவிட்டி தாக்குகிறார்கள் 2 இளைஞர்கள்.. ஒருவர் ஊழியரை வெட்ட, இன்னொருவர் செல்போனை பறித்து கொண்டு ஓடும் சிசிடிவி காட்சி சென்னைவாசிகள் வயிற்றில் புளியை கரைக்கிறது! சென்னை காசிமேடு எஸ்என் செட்டி தெரு கொடிமரத்து சாலை அருகே எச்.எம்.டி. நகை கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஸ்விகி நிறுவனத்தின் டெலிவரி பாய் துளசிராம் மழைக்காக இந்த கடை வாசலில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து, இரு இளைஞர்கள் வந்து, துளசிராமன் தலையில் கத்தியால் வெட்டி விட்டு, கையில் வைத்திருந்த செல்போனை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். பிறகு போகிற போக்கில், 2 பேரும், காசிமேடு மீன்பிடித் துறைமுகம் அருகே பல்சர் பைக்கையும் திருடி கொண்டு போயுள்ளனர். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வந்த நிலையில், இப்போது சிக்கி விட்டனர். மொட்டை தோட்டம் பகுதியில் பல்சர் வண்டியை ரெண்டு பேரும் தள்ளி வந்து கொண்டிருந்தனர். அப்போது இருவரையும் போலீசார் சந்தேகத்தில் விசாரணைக்கு அழைத்தபோது, தப்பி ஓடினார்கள். இதனையடுத்து இருவரையும் போலீசார் விரட்டிச் சென்ற போது மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து போலீசாரையும் மிரட்டி உள்ளனர். வளைத்து பிடிக்க முயன்றபோது ஒருவர் எஸ்கேப் ஆகிவிட, மற்றொருவர் சிக்கி உள்ளார். அவரிடம் 2 கத்தி பறிமுதல் செய்துள்ளனர். கைதானவர், புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கமாள் தெருவை சேர்ந்த லோகேஷ் என்கின்ற பல்லு லோகேஷ் என்பது தெரியவந்தது. இவர்களுக்கு ரவுடி கண்ணன் என்பவர் எதிரியாம். அதனால் அவரை கொலை செய்ய, தண்ணி அடித்துவிட்டு கத்தியுடன் கொலை செய்ய கிளம்பிய போதுதான் போலீசார் பிடித்துவிட்டனர். இப்போது லோகேஷ் சிறையில் உள்ளார். மற்றொரு ரவுடியை போலீசார் தேடி வருகிறார்கள்.