ஆண்டுகள் முப்பத்தியாறு கடந்தும்
ஆறாது மனத்திடை ஆழமாய் பதிந்து
சூறைக்காற்றாக அழிவுகள் தந்த
ஆறாத்துயரை வரிகளில் பொறிக்கிறோம்...
நாட்கள் பலவாய்த் தீட்டிய திட்டம்
இரு நாட்களாய் அரங்கேற்றிய சதித்திட்டம்
அள்ளிக் கொடுத்தோம் எம்மவர் உயிர்களை
அழித்துப் போனது கயவர் கூட்டம்...
சிங்களத்தின் கொடுமைக் கூத்து
சிறைகளிலும் பெரும் நாச வேட்டு
வெட்டியும் கொளுத்தியும் போட்ட ஆட்டம்
அடடா மனம் வேகுதையா எண்ணுகையில்...
ஆயுதம் ஏந்திட வைத்த காலம்
பாயும் புரட்சிக்கு அடித்தளம் இட்ட கோலம்
கொடுமைகளால் சொத்துக்களும் அழித்து
சோகமயமாய் எம்மவர் நிலை அன்று...
அடிக்கு மேல் அடிவைத்தால்
அம்மியும் நகருமாமே அடிமேல் அடி விழுந்து
எம்மவர் நிமிர்ந்தெழ ஆடியே நீயே காரணியாய்
எழுச்சி புரட்சி புயலின் மிரட்சி யாவும் உன்னாலே...
போதும் என்றோம் போதவில்லை உனக்கு
சூதுவாது கொண்டே இன்றும் அழிக்கிறாய்
வேருகள் விழுதுகள் கொண்டெழும்-ஆண்டுகள்
ஆகியும் ஆறாது எம் கோபத்தின் வடுக்கள்...
-சிவதர்சினி ராகவன்-