தென்தமிழீழம்: திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் சைவ அடையாளங்களைத் திட்டமிட்டு மறைக்க முனையும் தொல்பொருள் திணைக்களத்தின் நடவடிக்கைகளும், அதனை எதிர்த்து தமிழர் கூடியபோது, தவத்திரு தென்கயிலை ஆதீன குருமுதல்வர் மேல் விசமிகள் சுடுதேநீர் ஊற்றியமையும் சைவமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு தெரிவித்துள்ள கொழும்பிலுள்ள சிறிலசிறி ஆறுமுகநாவலர் சபை, கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது.
இது பற்றி சபை அனுப்பிய செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதா வது:
நாட்டில் நிலவிவரும் பல்வேறுபட்ட அசாதாரண சூழ்நிலைகளின் மத்தியில் தமிழ் மக்கள் வேதனை கொள்ளுமளவுக்கு முல்லைத்தீவில் நீராவியடி, செம்மலைப் பிள்ளையார் கோவிலில் சைவ மக்களின் வழிபாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இடைஞ்சல்கள், நத்திக்கொடியை கழற்றி வீசி பௌத்த துறவியர் மேற்கொண்ட அநாகரிகமான நடவடிக்கைகளும் இந்து மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பௌத்த – -சைவ உறவை வலுப்படுத்த அரசியற் தலைவர்களும் சமயத் தலைவர்களும் முன்வரவேண்டும்.
சைவ மக்களினுடைய எதிர்பார்ப்புக்களை நன்குணர்ந்து கடமையாற்றும் இலங்கை இந்து மத கலாசார அலுவல்கள் அமைச்சர் மனோ கணேசனின் செயற் பாடுகளை வரவேற்கின்றோம். காலத்துக்கு ஏற்றாற்போல் தக்க நடவடிக்கைகளை உரியநேரங்களில் எடுத்து இந்தப் பணியில் முன்னின்று இந்துமத கலாசார அலுவல்கள் அமைச்சரெனும் வகையில் சைவசமய அடையாளங்களை அவர் காத்திடவேண்டும் – – என்றுள்ளது.