வடதமிழீழம்: முல்லைத்தீவு மாவட்டத்தில், பிரதேசசபை மற்றும் பிரதேசசெயலகம் ஆகியவற்றின் அனுமதியுடனேயே இனி மீனவர்களுக்கான வாடி அமைக்க முடியுமென்று கரைதுறைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்கான முதலாவது கரைதுறைப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன், அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள மீனவர் வாடிகள் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது பற்றி நீண்டநேரமாக இடம்பெற்ற பலரின் கருத்துகளையடுத்து, பிரதேசசபை மற்றும் பிரதேச செயலகம் என்பவற்றின் அனுமதி பெறப்பட்டே இனி வாடிகள் அமைக்கப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் வெளிமாவட்ட மீனவர்களின் வருகையைக் குறைக்கும் வகையிலும், வெளிமாவட்டத்திலிருந்து வந்து சட்டவிரோதமாக வாடி அமைத்து தொழில் புரிபவர்களின் வாடிகளை அகற்றும் நோக்கிலுமே இவ்வாறானதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.