போர்க் குற்றவாளிகளை ஒருபோதும் தண்டிக்கமாட்டோம் – மஹிந்த

breaking

மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் போர்க் குற்றவாளிகள் என்ற பெயரில் எவரையும் தண்டிக்கப் போவதில்லை என   மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அதிகாரம் கைக்கு வந்ததும் அரசியல் தீர்வு உட்பட வடக்கு, கிழக்குத் தமிழருக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம் என்றும் அவர் கூறினார்.

நேற்றுமுன்தினம் (வியாழக்கிழமை) கிளிநொச்சியில் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் போர்க்குற்றவாளிகளைத் தண்டிப்பீர்களா என  மஹிந்த ராஜபக்ஷவிடம் கேள்வி எழுப்பி பேசியிருந்தார்.

இதற்கு பதிலளித்து கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ, ” 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் நிறைவுக்கு வந்து ஒரு வருடம் முடிவதற்கு முன் 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்கிய பொதுவேட்பாளரான முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஆதரவு வழங்கினார்கள்.

எனினும், அந்தத் தேர்தலில் அவர் படுதோல்வியடைந்தார். போருக்குத் தலைமை தாங்கிய இராணுவத் தளபதியை விரும்பிய தமிழர்கள், அந்தப் போரில் பங்கேற்று சுதந்திரத்தைப் பெற்றுத்தந்த படையினரை ஏன் வெறுக்கின்றார்கள்?

அந்தப் போர் வீரர்களை ஏன் போர்க்குற்றவாளிகள் என்று அழைக்கின்றார்கள்? தமிழர்களின் இந்த வெறுப்பு எதற்காக என்று இன்னமும் எமக்குப் புரியவில்லை. ஆனால், தமிழர்களை நாம் மனதார நேசிக்கின்றோம்.

நாம் மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியதும் அரசியல் தீர்வு உட்பட தமிழருக்குத் தேவையான அனைத்து விடயங்களையும் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம்.

சிறைச்சாலையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கும் விடுதலையைப் பெற்றுக்கொடுப்போம். எந்தக் காரணம் கொண்டும் போர்க் குற்றவாளிகள் என்ற பெயரில் எவரையும் தண்டிக்கவேமாட்டோம்” என குறிப்பிட்டுள்ளார்.