பல்கலைகளில் அடிதடியில் ஈடுபட்ட சிங்கள மாணவர்கள் கைதாகி விடுதலை!

breaking
யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் பயிலும் சிங்கள மாணவர்கள் 7 பேர், மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர். குறித்த மாணவர்களை யாழ்ப்பாணம் நீதிமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆஜர்படுத்திய போதே பிணை வழங்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் 2ஆம் மற்றும் 3ஆம் வருட மாணவர்களுக்கு இடையில் நேற்று முன்தினம் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியில் கைகலப்பு ஏற்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாயிலில் இராணுவத்தினர் கடமையில் இருந்த நிலையில் இந்த மோதல் இடம்பெற்றதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தங்கியுள்ள விடுதிவரை மோதல் நீடித்தது. இச்சம்பவத்தில் சிங்கள மாணவர்கள் சிலர் காயமடைந்தனர். இது தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், மாணவர்கள் சிலர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த மோதலுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 7 சிங்கள மாணவர்களை கைது செய்தனர். அவர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் முன்னிலையில் இன்று முற்படுத்தப்பட்டனர். மாணவர்கள் மீதான குற்றச்சாட்டை ஆராய்ந்த நீதிவான், அவர்கள் 7 பேரையும் பிணையில் விடுவித்து வழக்கை ஒத்திவைத்தார்.