வட தமிழீழம் , வவுனியாவில் குழு மோதல் .!

breaking
வட  தமிழீழம் , வவுனியா குருமன்காட்டில் இடம்பெற்ற குழு மோதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குருமன்காடு பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியிலிருந்து இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு இரவு 7 மணியளவில் மோதலாக மாறியது. இதனையடுத்து கண்ணாடி போத்தல்கள், வாள்கள், கத்திகள் போன்ற ஆயுதங்களைக் கொண்டு இரு குழுக்களிடையே தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும் மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் மதுபோதையில் இருந்ததாக அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இதுவரையில் ஏழு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் வவுனியா பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.