வறட்சியால் வற்றிப்போகும் உன்னிச்சைக்குளம்: தென்தமிழீழத்தல் குடிநீருக்கு தட்டுப்பாடு

breaking
  தென்தமிழீழம்: மட்டக்களப்பில் நிலவிவரும் கடும் வறட்சியுடனான காலநிலை காரணமாக இலங்கையின் மிகப்பெரும் நீர்பாசனக் குளங்களில் ஒன்றான உன்னிச்சைக்குளத்தின் நீர் வற்றியுள்ளது. இதன் காரணமாக அதனை நம்பியுள்ள குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பில் பாரிய நீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 33அடி நீர் கொள்ளவு கொண்ட உன்னிச்சை குளத்தில் தற்போது நான்கு அடி நீரே காணப்படுகின்றது. உன்னிச்சைக்குளத்தின் நடுப்பகுதியில் மட்டுமே நீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உன்னிச்சைக் குளத்திலிருந்து தற்போது குடிநீருக்காக மட்டுமே நீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் இன்னும் ஒரிரு மாதங்களுக்கு மட்டுமே அவ்வாறு நீர் விநியோகம் செய்யமுடியும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நீர்பாசனத் திணைக்கள பணிப்பாளர் எஸ்.எம்.பி.எம்.அஷார் தெரிவித்தார். அத்தோடு, மழை பெய்யாவிட்டால் முற்றாக நீர் விநியோகத்தினை நிறுத்தவேண்டிவரும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதேநேரம் உன்னிச்சைக்குளம் வற்றிவருவதன் காரணமாக குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த காலத்தில் சரியான முறையில் நீர் முகாமைத்துவம் செய்யாத காரணத்தினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக 7000க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 3000க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு, 229 மேட்டு நில பயிர்ச்செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் வறட்சி காரணமாக நீரை சிக்கனமாகவும் கவனமாகவும் பாவிக்குமாறு மக்களிடம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.