தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவருக்கும் முட்டுக்கொடுக்கவில்லை. ஓர்மையுடன் குரல் கொடுத்து தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ அடித்தளமிட்டு வருகின்றது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். 36 ஆயுத குழுக்கள் இருந்த போது இருந்த ஒற்றுமையைவிட கூடுதலாக தற்போது ஒற்றுமை இருக்கிறது. எங்களுக்கு இருப்பது இரண்டு பலங்கள். ஒன்று எங்களது ஒற்றுமை. மற்றையது சர்வதேசம். ஆகவே இவை இரண்டையும் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து சமகால அரசியல் நிலைவரம் தொடர்பாக விழிப்புணர்வூட்டும் மக்கள் சந்திப்பும் கருத்தரங்கும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.
அங்கு சமர்ப்பிக்கப்பட்ட சுமார் 35 இற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்து தொடர்ந்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் சாவகச்சேரியிலும் இவ்வாறான மக்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து புரிந்துணர்வை ஏற்படுத்தும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தோம்.
இத்தகைய கருத்தரங்குகளுக்கு கட்சி ஆதரவாளர்களைவிட கட்சியை விமர்சிப்பவர்களைத்தான் அழைத்திருந்தோம். ஏனென்றால் கட்சியை விமர்சிப்பவர்களின் கருத்தும் முக்கியம் என்பதால் நாம் அவ்வாறு செய்தோம்.
இன்றைய அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டதன் மூலமாக அடைந்தது என்ன என்ற கேள்விகளே அங்கும் பரவலாக எழுந்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை சீர்குலைந்திருந்தால் செய்யக்கூடியதாக இருந்த விடயங்களைக் கூட செய்வதற்கு முடியாதிருந்திருக்கும் என்பது மக்களுக்குத் தெரியும்.
இந்த ஒற்றுமையாவது இருந்திருக்காவிட்டால் இதுவரைக்கும் நாங்கள் செய்திருப்பதைக்கூட செய்திருக்க முடியாமற் போயிருக்கும். எங்களுக்கு இருப்பது இரண்டு பலங்கள். ஒன்று எங்களது ஒற்றுமை. மற்றையது சர்வதேசம். ஆகவே இவை இரண்டையும் இறுகப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும். இதனைக் கொண்டுதான் விடிவை நோக்கி நகர முடியும். சமாதானச் சூழ்நிலையிலே எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என்று வரையறை இருக்கின்றது.
அதேபோன்றுதான் ஜனநாயக முறையிலே எதைச் செய்ய முடியும் எதைச் செய்யக்கூடாது என்ற வரையறை இருக்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இப்பொழுதும் தடை இருக்கின்றது.
நியாயமான வேண்டுகோள்களை நாங்கள் விடுக்கவில்லை. அவர்களுக்குரியதை நாங்கள் கேட்கவில்லை. எங்களுக்குரியதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். இது நியாயமானது. ஜனநாயக முறையிலே சர்வதேசத்தின் ஆதரவையும் பெற்று அவர்களது நாட்டிலும் இருக்கும் ஆட்சி முறைமைகள் பற்றி அதில் நியாயமானதைப் பற்றித்தான் கேட்கின்றோம்.
பெரும்பான்மையினத்தவர்களை எதிர்ப்பதைவிட அந்த சமூகத்திலுள்ள முற்போக்கு சக்திகளின் ஆதரவை நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். சிங்கள மக்கள் மத்தியிலே நாங்கள் சரியாகப் பிரசாரம் செய்யவில்லை என்ற கருத்து பரப்பப்படுகிறது. அது தவறானது. சிங்கள மக்கள் மத்தியிலே இருக்கின்ற முற்போக்கு சக்திகளோடு இணைந்து நாங்கள் பணியாற்றியிருக்கின்றோம்.
சோபித தேரரின் முதலாவது கூட்டத்திலும் நாங்கள் பங்குபற்றி நாட்டில் பெரும்பான்மை மக்கள் மத்தியில் எமது நியாயமான விடயங்களை எடுத்துக் கூறுவதில் முன்னின்று உழைத்தோம்.
இணக்கப்பாட்டு அரசாங்கத்தை உருவாக்குவதில் சோபித தேரர் எடுத்த முன்னெடுப்பு மிகவும் காத்திரமாக இருந்தது. எமது உரிமைப் போராட்ட வரலாற்றில் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைத்தபோது சிங்கள மக்கள் எதிர்த்தார்கள்.
ஆனால் நியாயமான அதிகாரப் பகிர்வோடு ஆட்சியதிகாரங்களைக் கோர முடியும். இதற்கு சர்வதேச ஆதரவும் இருக்கும். தன்னுடைய சட்டங்களை தானே அமுல்படுத்துகிற சுயாதீனம் ஒரு நாட்டுக்கு இருக்கிறது. 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி அதற்கு அப்பாலும் சென்று அர்த்தமுள்ளதாக மாற்றுவேன் என்றார் மஹிந்த ராஜபக் ஷ. ஆனால் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றார்.