மகிந்தவுடன் இணக்கப்பாடு இல்லை, சஜித்துக்கு ஆதரவு : மைத்திரி தகவல்
தமிழர்களை இன அழிப்பு செய்த ஶ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவுடன் இணக்கப்பாடு எதுவும் காணப்படவில்லை. அவருடன் இணக்கப்பாடு காணப்பட்டதாக வெளியான செய்தி தவறானதாகும் என்று தற்போதைய ஶ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுக்காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் இடம்பெற்றது. அமைச்சரவைக் கூட்டத்தை அடுத்து ஜனாதிபதியை சந்தித்த ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த சிறுபான்மையின அமைச்சர் ஒருவர் ஜனாதிபதியிடம் இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார்.
மஹிந்த ராஜபக்ஷவுடன் நீங்கள் நடத்திய சந்திப்பின்போது பொதுஜன பெரமுனவில் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான இணக்கம் காணப்பட்டதாகவும் அதற்கு பிரதி உபகாரமாக உங்களுக்கு உரிய பதவியை தருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஆங்கிலப் பத்திரிகையொன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறான இணக்கம் காணப்பட்டுள்ளதா? பொதுஜன பெரமுன வேட்பாளரை நீங்கள் ஆதரிக்கப்போகின்றீர்களா என்று அந்த அமைச்சர் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி அவ்வாறான எந்த இணக்கப்பாடும் ஏற்படவில்லை. அவ்வாறு வெளியாகிய செய்திகள் தவறானவை.. அதனை நம்பவேண்டாம் என்று கோரியுள்ளார்.
இதன்போது பொதுஜன பெரமுனவிற்கு நீங்கள் ஆதரவு வழங்காது எமது கூட்டணிக்கு ஆதரவை வழங்கவேண்டும் என்றும் அந்த அமைச்சர் கோரியபோது ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டால் இந்த விடயத்தில் நடுநிலைமை வகிப்பது குறித்து பரிசீலிக்க முடியும் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.