வவுனியாவில் ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று (புதன்கிழமை) குறித்த போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை அச்சுறுத்தும் வகையில் புலனாய்வாளர் ஒருவர் ஒளிப்படம் எடுத்துள்ளார்.
இதனால் ஒளிப்படம் எடுத்த சிவில் உடை தரித்த புலனாய்வாளருடன் உறவுகளின் இணைப்பாளர் தர்க்கத்தில் ஈடுபட்டதுடன் அவரது அடையாளத்தை உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார். இதற்கு எவ்வித பதிலும் தெரிவிக்காது குறித்த புலனாய்வாளர் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.
இவர், போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளையும் அவர்களின் கைகளில் தாங்கியிருந்த பதாதைகளையும் சுற்றிச்சுற்றி ஒளிப்படம் எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை தம்மை அச்சுறுத்தும் நடவடிக்கையாக அமைந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.