பனிக்கன்குள வீடுகள் கைமாறுகின்றன!

breaking
முல்லைத்தீவு - பனிக்கன்குளம் பகுதியில், அரச ஊழியர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட ஐம்பது வீட்டுத் திட்டத்தில், அரச ஊழியர்கள் எவரும் குடியேறாததன் காரணமாக, குறித்த வீடுகளைப் பொதுமக்களுக்கு வழங்குவதற்கு, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய குறித்த வீடுகளை, வீட்டுத் திட்டங்களுக்கு உள்வாங்கப்படாத பனிக்கன்குளம் பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கான பதிவுகளை, ஒட்டுசுட்டான் பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது. இதேவேளை, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட நிரந்தர வீடுகளில், இதுவரையில் பொதுமக்கள் குடியமராத வீடுகள் தொடர்பான விவரங்களை, பிரதேச செயலகங்கள் மூலம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் திரட்டி வருகின்றது. வீடுகளற்ற குடும்பங்களுக்கு அவ்வாறான வீடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை, முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.