சிக்கல்களிற்கு மத்தியில் மண்டூர் குருமன்வெளி வாவியூடாக பயணிக்கும் மக்கள்

breaking
  வீதி அபிவிருத்தித் திணைக்களத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மண்டூர்,குருமன்வெளி வாவியூடான இயந்திரப்படகில் பயணிக்கும் பிரதேச வாசிகள் பல சிரமங்களுக்கு மத்தியில் தங்களின் பயணங்களை மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளனர். தங்களின் போக்குவரத்தினை இலகுபடுத்தும் நோக்கில் எழுவான்கரை மற்றும் படுவான்கரை மக்கள் இந்த மண்டூர் குருமன்வெளி வாவியூடாக இயந்திரப்படகின் மூலம் தங்களின் பயணங்களை சிரமங்கள் இல்லாமல் இலகுவாக மேற்கொண்டு வருவது வழக்கம். ஆனால் அண்மைக்காலங்களாக இந்த இயந்திரப்படகினூடாக பயணிக்கும் பிரதேச வாசிகள் மற்றும் வாகன சாரதிகள்,பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள் பல சிரமங்கள் மத்தியில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். மண்டூர்,மற்றும் குருமன்வெளி ஆகிய இரு இடங்களில் இயந்திரப் படகு தரித்து நிற்கும் தரிப்பிடத்தை விட்டு குண்டும் குழியுமாக சீரற்ற கற்கள் நிறைந்த தரிப்பிடத்தில் இந்த இயந்திரப் படகு தரித்து நிற்பதால் வாகன சாரதிகள் தங்களின் வாகனங்களை ஏற்றி இறக்குவதில் பல சிரமங்களை எதிர் கொள்வதோடு விபத்துக்களும் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.இந்நிலமையினை இந்த இயந்திர படகு சேவையினை பொறுப்பேற்று நடத்தும் ஒப்பந்தகாரர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் கவலையழிப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே வீதி அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் பிரதேச வாசிகள் சிரமமில்லாமல் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு இந்த படகுச்சேவையினை பொறுப்பேற்று நடத்துகின்ற ஒப்பந்தகாரர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இதற்கான உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமட்ட அமைப்புக்கள் தெரிவிக்கின்றனர்.